‛போடுங்கம்மா ஓட்டு... எங்க சின்னத்தை பார்த்து’ என கடந்த சில நாட்களாக கத்தி கூப்பாடு போட்டவர்கள் தொல்லை இனி இருக்காது. ஆமாம், இன்று மாலையோடு நகர் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. விடிந்தது முதல், இரவு வரை கூட்டம் கூட்டமாய், கொடியும், அணிவகுப்புமாய் கோலாகலமாய் காட்சியளித்த வார்டுகள், இனி வெறிச்சோடி காணப்படும்.




தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல், அரசியல் கட்சிகளுக்கு இணையாக ஆட்களை சேர்த்து, கெத்து காட்டிய சுயேச்சை வேட்பாளர்களை பார்த்த நமக்கு, ஒரு வேட்பாளர் மட்டும், தொடங்கியது முதல், பிரச்சாரம் நிறைவு நாளான இன்று வரை ஒரே ஆளாக பிரச்சாரத்தை முடித்திருக்கிறார்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள  36 வார்டுகளிலும், வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வரும் நிலையில், 15 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகம் தான், அந்த ‛சோலோ’ பிரச்சாரத்திற்கு சொந்தக்காரர். இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இவர் ஒரு முன்னாள் சுயேட்சை கவுன்சிலர். தன் மீதான நம்பிக்கை, மக்களுக்கு தன் மீதான நம்பிக்கை, இவற்றை கருத்தில் கொண்டு இம்முறையும் களமிறங்கியிருக்கும் ஆறுமுகம், தனது சின்னமான அரிக்கேன் விளக்கை அடையாளப்படுத்தும் விதமாக, இரு அரிக்கேன் விளக்குகளை தோளில் தொங்கவிட்டபடி, துண்டு பிரசுரங்களுடன் தெரு தெருவாக ஓட்டு சேகரித்தார்.




அதே தெருவில் பிற கட்சிகள் கூட்டம் சேர்த்து வாக்கு சேகரிக்க, யாருக்கும் எந்த சொந்தரவும் செய்யப் போவதில்ை என்று முடிவு செய்து, தானே பொடி நடையாக நடந்து, வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி, ஓட்டு கேட்டு வருகிறார் ஆறுமுகம். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, ‛‛ சுயேட்சை வேட்பாளரான தன்னை வார்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்றும்; எனக்கு ஓட்டு கேட்டு நான் தான் போக வேண்டும், பிறரை எதற்கு அழைத்துச் செல்ல வேண்டும்,’’ என்று கேள்வி எழுப்பும் ஆறுமுகம், ‛‛வார்டுக்கு நன்கு பரிட்சையமான எனக்கு விளம்பரங்கள் வேண்டாம்... மக்களின் ஆதரவு போதும், என்பதால் தனியாக பிரச்சாரம் செய்கிறேன்’’ என்றார். 


ஏற்கனவே வெற்றி பெற்ற அனுபவம் இருப்பதால், ஒரு வேளை அவர் வெற்றி பெறும் பட்சத்தில், சோலோ பிரச்சாரத்தில் செலவின்றி வெற்றியை பெற்ற வேட்பாளராக இவர் மாற வாய்ப்புள்ளது. அரிக்கேன் விளக்கோடு... செல்லும் சுயேச்சை வேட்பாளரை பார்க்கும் போது, அழகி படத்தில் வரும் ‛ஒளியிலே தெரிவது தேவதையா...’ பாடல் தான் நினைவுக்கு வருவதாக வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண