காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பரப்புரையில் ஈடுபட்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில், நகர மன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல், இந்தியாவில் மூன்று அடுக்கு தேர்தல் உள்ளன, சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை விட மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள உள்ளாட்சி மன்றம் மிக முக்கியமானது. பிற கட்சி வேட்பாளர்களை பாமக வேட்பாளர்கள் நேர்மையானவர்கள், வசதியில்லாதவர்கள், உங்களுக்காக பாடுபடுவார்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள். 

 

பிற கட்சி வேட்பாளர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் நீங்கள் அவரை தேடி செல்ல வேண்டும். ஆனால் பாமக வேட்பாளர்கள் உங்களை தேடி வருவார்கள். காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முதலாக நடக்கும் தேர்தலில், உறுதியாக காஞ்சிபுரம் மேயராக பாமகவை சேர்ந்தவர் வருவார். அதற்கு நீங்கள் எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மேயராக பாமக வெற்றி பெற்றவுடன், போடும் முதல் கையெழுத்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் டாஸ்மார்க் இல்லாத நகரமாக மாற்ற, கையெழுத்து போடுவார். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது என தெரிவித்தார்.

 



 

காஞ்சிபுரம் நகராட்சியில் போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேடு, கழிநீர் வடிகால்கள் இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளும் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் இருந்து எதுவும் செய்யவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு, மக்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கு தீர்வு வைத்திருக்கிறோம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் விஞ்ஞான ரீதியான ஆய்வு மேற்கொண்டு தீர்வு தரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என பேசினார். பேரறிஞர் அண்ணா மதுவை ஒழிக்க வேண்டும் என பாடுபட்டவர். திமுகவை ஆரம்பித்தவர் அண்ணா,  அண்ணா பெயரில் உள்ள கட்சி அதிமுக. அண்ணாவை வைத்து கட்சி நடத்தும் இருவரும் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தை மறந்துவிட்டார்கள். காஞ்சிபுரம் நகரத்தை மாடல் சிட்டியாக மாற்றுவோம், பிற நகரங்களுக்கு காஞ்சிபுரம் நகரத்தை எடுத்துக்காட்டாக மாற்றுவோம் .உங்களுக்கு என்ன வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். திமுக மற்றும் அதிமுகவோ அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை திணிப்பார்கள்.



 

காஞ்சிபுரத்தில் பிறந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோயால் காலமானார். 1981  அண்ணாவின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனையை துவங்கினார்கள். ஆனால் அதில் எந்த ஒரு வசதியும் செய்யவில்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மத்திய சுகாதார அமைச்சராக வந்தபிறகு, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ரீஜினல் கேன்சர் சென்டர் ஆக உயர்த்தி நடவடிக்கை மேற்கொண்டேன். அந்த மருத்துவமனையில் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் வந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பால் போன்ற ஆறு பாலாறு தற்பொழுது பாலைவனமாக மாறி உள்ளது. கர்நாடகாவில் பாயும் பாலாற்றில் 93 கிலோமீட்டர் பாய்கிறது. இதில் கர்நாடகா 18 தடுப்பணை கட்டி உள்ளது. ஆந்திராவில் 23 கிலோமீட்டர் உள்ளது, அவற்றில் 33 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 220 கிலோ மீட்டர் பாயும் பாலாற்றில் நான்கைந்து ஆண்டுகள் முன்பு வரை ஒரே ஒரு தடுப்பணை மட்டுமே இருந்தது, இப்பொழுதுதான் சில தடுப்பணைகள் கட்டி உள்ளனர். நான் பாலாற்றை காப்போம் என பயணம் மேற்கொண்டேன். ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டேன். 1998 ஆம் ஆண்டு பாலாற்றை காக்க வேண்டும் என்று 120 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டவர் மருத்துவர் ராமதாஸ் என தெரிவித்தார்.



 

பாமகவிற்கு வாய்ப்பு கொடுத்தால், ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் 50 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது. தடுப்பணை கட்டி இருந்தால், பாலாறு முழுவதும் தண்ணீர் தேங்கி இருக்கும். இயற்கை கொடுப்பதை ஆட்சியாளர்கள் நாசப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் . காலநிலை மாற்றம் வர உள்ளது, இதுகுறித்து திமுக, அதிமுகவிடம் கேட்டால் அவர்களுக்கு தெரியாது. அவர்களிடம் சென்று ரோடு போடுகிறீர்களா என்று கேட்டால், தெரியும் எவ்வளவு கமிஷன் என்று கேட்பார்கள். அவ்வளவு தான் அவர்களுக்கு தெரிந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் நீட் வர  அதிமுக தான் காரணம், அதிமுக நீட் வர திமுக என மாறி மாறி குறை கூறுகின்றனர். இருவரும் பொது விவாதம் நடத்த தயார் என மாற்றி மாற்றி கூறிக்கொள்கிறார்கள். அப்படி பொது விவாதம் நடந்தால் நானும் தயார். இன்று நீட் தேர்வு இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் திமுக, பாஜக, அதிமுக என அனைவரும் தான் என குற்றச்சாட்டை முன் வைத்தார்.



 

ஏரி மாவட்டம் என பெயர் பெற்ற நிலையில், தற்போது ஏரிகள் எங்கே என் தேடவேண்டிய நிலையில் உள்ளது. போலி பட்டு கூட்டுறவு சங்கம் உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகிறது. மதுவிலக்கு குறித்து திமுக, அதிமுக விவாதத்திற்கு தயாரா? காஞ்சிபுரம் மாநகராட்சியை தூய்மையான நகரை உருவாக்குவோம், நெரிசலை குறைக்க திட்டம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்தும் சிறப்பாக திட்டம் எங்களிடம் உள்ளது. இப்பரப்புரை கூட்டத்தில், முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், சக்தி கமலம்பாள், உமாபதி என பலர் கலந்து கொண்டனர்.