காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 பதவிகளுக்கு 409 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் மாநகராட்சி பதவிகளுக்கான போட்டியில் 51 இடங்களில் திமுக 42 இடங்களையும், அதிமுக 45 இடங்களையும், பிற கட்சிகளான பாமக 42 , பாஜக 31, நாம் தமிழர் 25-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மக்கள் நீதி மையம் 16 இடங்களிலும், கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் போட்டியிடுகிறது. தமாகா 4 இடங்களில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சி , முஸ்லிம் லீக், ஜனதா தளம், அமமுக கூட ஆகியவை ஓரிரு இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் மாநில கட்சி அந்தஸ்தில் இருக்கும் தேமுதிக ஒரு இடங்களில் கூட போட்டியிடாது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலக் கட்சி அந்தஸ்தில் இருக்கும் தேமுதிக வேட்பாளரை கூட நிறுத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் ? . தேமுதிக கடந்து வந்த வரலாற்றை பற்றி பார்க்கலாம்.



தேசிய முற்போக்கு திராவிட கழகம்

 

2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14இல்  விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்டது தேசிய முற்போக்கு திராவிட கழகம். கட்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றமாக இருந்து செயல்பட்டு வந்த மன்றத்தின் மூலமாக நிர்வாகிகளை ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை வெற்றி பெறவும் வைத்தார். இன்று விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னோடியாக இருந்தவர் தான் விஜயகாந்த். 2006 தேமுதிக தனது முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது, இந்த தேர்தலில்  கிடைத்த வாக்குகள் சதவிகிதம் 8.4 % .




2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் யாருடனும், கூட்டணி வைக்காமல் தனித்தே களமிறங்கியது. அதில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியடைந்தாலும், அக்கட்சி 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது.2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான். அதிமுகவுடன் கைகோர்த்து களமிறங்கிய அக்கட்சி, போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 இடங்களில் வெற்றி பெற்றது, விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவரானார். பின்னர் அதிமுகவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகியது. அதிலிருந்து 2014, 2016,2019,2021 ஆகிய தேர்தலில் தொடர்ந்து சறுக்கலை தேமுதிக சந்தித்து வருகிறது. ஒரு சதவீதத்திற்கும் கீழ் தற்போது தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது.

 

காஞ்சிபுரம் தேமுதிக 

 

2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஏகாம்பரம் 15,187 வாக்குகளை பெற்றார், இது சுமார் 9 சதவீதமாகும். ஆரம்ப காலகட்டத்தில், காஞ்சிபுரத்தில் தேமுதிக செல்வாக்காககவே இருந்து வந்தது. 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு தேமுதிக வாக்கு வங்கி பயன்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் கூட நான்கு சதவீதம் வாக்குகளை தேமுதிக வைத்திருந்தது. 2021 நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கவுன்சிலர் இடத்தைக்கூட தேமுதிகவில் பெற முடியவில்லை, இருந்தும் கணிசமான இடங்களில் தேமுதிக போட்டியிட்டது.


காஞ்சிபுரத்தில் தேமுதிக நகர செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினராக இருந்தவர் சாட்சி சண்முகசுந்தரம். விஜயகாந்தின் மிகத் தீவிர ஆதரவாளராக காஞ்சிபுரம் நகரப் பகுதியில் வலம் வந்தார். விஜயகாந்த் நடித்த சாட்சி என்ற திடைப்படத்தை அடைமொழியாக வைத்துக் கொண்டவர்.  விஜயகாந்த் பிறந்தநாள், திருமணநாள், கட்சி விழாக்கள் என எதுவாக இருந்தாலும் தாரை தப்பட்டை, பரிவாரங்களோடு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், உள்ளிட்ட முக்கிய கோவில்களில்  சிறப்பு பூஜைகளை நடத்துவார். பொதுமக்களுக்கு பிறந்தநாள் அன்று அன்னதானம் வழங்குவது, உதவிகள் செய்வது என தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தவர். 

 

காஞ்சியில் காணாமல் போன தேமுதிக

 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மீண்டும் திரும்ப பெறப்பட்டார். இருந்தும் தொடர்ந்து கட்சி பற்றி பணியாற்றி வந்த சண்முகம் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது மிகப்பெரிய ஆதரவு பட்டாளத்துடன் திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவின் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 11 வது வார்டு வேட்பாளராக போட்டியிடுகிறார்.



 

அதன்பிறகு நகர செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பெரிய அளவில் கட்சிப்பணி செய்யாதது, உள்ளிட்ட காரணங்களால் தேமுதிக காஞ்சிபுரம் பகுதியில் சரிவை சந்தித்து வருகிறது. லெட்டர்பேடு கட்சிகள் கூட சில வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் நிலையில், தேமுதிக ஒரு வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என புலம்புகிறார்கள் மூத்த உறுப்பினர்கள். இதுகுறித்த காஞ்சி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர்  சந்தரமவுலி உள்ளிட்டவர்களிடம், தொடர்பு கொண்ட கேட்ட பொழுது மழுப்பலாக பதில் அளித்தனர்.