புதிதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முதன்முறையாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அதையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சியிலுள்ள 51 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி முதல் நாளையுடன் நிறைவடைகிறது. நேற்று வரை 114 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பா.ம.க உள்ளிட்ட பிறக் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை ஆர்வத்துடன் தாக்கல் செய்து வருகின்றனர்.



அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகரட்சி 21வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பி.எஸ்.சி பட்டதாரியான பெண் வேட்பாளர்  எல்.விஜிதா என்பவர் போட்டியிடுவதையொட்டி தனது 8 மாத கைக்குழந்தையுடன் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்து, வரிசையில் நின்று,  காத்திருந்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது  வேட்பு மனுவை விஜிதா தாக்கல் செய்தார்.

 

காஞ்சிபுரம் 

 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மாங்காடு மற்றும் குன்றத்தூர்  நகராட்சி, ஶ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியிள்  18 வார்டுகள் என 156 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  



அதையொட்டி கடந்த 28ம் தேதி முதல் மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு நகராட்சி மற்றும் வாலாஜாபாத்,ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று வரையில் 114 நபர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுவதையொட்டி இன்று காலை 10 மணி முதல் திமுக, அதிமுக,பா.மக.மக்கள் நீதி மய்யம், பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகள் மற்றும் சுயேட்சையினர்  என மொத்தம் 436 நபர்கள் இன்று ஒரே நாளில்  தங்களது  வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.



அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 147 நபர்களும், குன்றத்தூர்  நகராட்சியில் 96 நபர்களும்,மாங்காடு நகராட்சியில் 58நபர்களும், உத்திரமேரூர் பேருராட்சியில் 28நபர்கள், வாலாஜாபாத் பேருராட்சியில் 57 நபர்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் 50 நபர்களும் என மொத்தம் 436 பேர் இன்று ஒரே நாளில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 156 பதவிகளுக்கு 550 நபர்கள் போட்டியிட வேட்புமனுகளை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.