ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் பணிகளுக்காக மீரூட் விரைந்துகொண்டிருந்த ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஓவைசியின் கார் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்துள்ள அசாதுதின் கூறுகையில்,’மீரட்டின் (உ.பி.) கிதாவுரில் நடந்த தேர்தல் தொடர்பான நிகழ்வுக்குப் பிறகு நான் டெல்லிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சாஜர்சி என்னும் இடத்தில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே 2 பேர் எனது வாகனத்தின் மீது 3-4 தோட்டாக்களால் சுட்டனர்; அவர்கள் மொத்தம் 3-4 பேர். இதனால் எனது வாகனத்தின் டயர்கள் பஞ்சராகிவிட்டன. அதனால் நான் வேறொரு வாகனத்தில் சென்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  






முன்னதாக, சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார். அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம தேதியும், 7ம் கட்டதேர்தல் மார்ச் 7ம் தேதியும் நடைபெறுகிறது. உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தனது ‘லட்கி ஹூன் லக் சக்தி ஹன்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 50 பெண் வேட்பாளர்களை உள்ளடக்கிய 125 வேட்பாளர்களின் முதல் பட்டியலை சட்டமன்றத் தேர்தலுக்கு வெளியிட்டது.


அதன்பின்னர் இரண்டாவது பட்டியலில் 41 வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 89 வேட்பாளர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 37 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் 40 சதவிகிதம் இடங்களில் பெண்கள் போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் அனைத்து கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அப்னா தல் மற்றும் நிஷாத் ஆகிய கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்திருந்தார்.


மேலும் அந்த மாநில தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜக வெளியிட்டது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன.