சதுரங்க வேட்டை பாணியை முதல்வர் ஸ்டாலின் கொள்கையாக வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்யாததையா இப்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் செய்யப் போகிறார்கள்? நான் மேடைதோறும் சொல்வதுபோல "ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்" என்ற சதுரங்க வேட்டை பாணியை தனது கொள்கையாக வைத்திருக்கும் பொம்மை முதல்வர்  ஸ்டாலினின் தொடர் நாடகத்திற்கு அறிவார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மயங்க மாட்டார்கள். இதற்கான தக்க பாடத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புகட்டுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.


அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே, திமுகவை வீழ்த்துங்கள்.. பழைய ஓய்வூதியத் திட்டம் தானாக கிடைக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; நாம் அவரை சித்தப்பா என்று அழைத்து மகிழலாம் என்கிறார் முதலமைச்சர். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஏமாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் நலன் சார்ந்து திமுக அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானவை...

1. தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் (வாக்குறுதி  எண்:153)

2. 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் (வாக்குறுதி எண்:308)

3. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் ( வாக்குறுதி எண்:309)

4. சமவேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின்படி, ஆசிரியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் (வாக்குறுதி எண்: 311)

5. அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள் ( வாக்குறுதி எண்: 313)

இந்த 5 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.  இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை வீதம் இதுவரை மூன்று முறை சென்னையில் பல வடிவங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர்களுடன் பேச்சு நடத்திய தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் அடுத்த சில வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தும் கூட இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை.


ஏமாற்று வேலை

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு அரசின் நிதி நெருக்கடிதான் காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை என்றால், மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுவது மோசடி ஆகும். அரசு ஊழியர்களை ஏமாளிகளாக முதலமைச்சர் கருதுவதையே இது வெளிப்படுத்துகிறது.


மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்

தமிழ்நாடு அரசின் நிதிநிலை ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. தமிழகத்தின் நிதிநிலை எந்த அளவுக்கு இப்போது நெருக்கடியாக இருக்கிறதோ, அதே அளவுக்குத்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தது. தமிழ்நாட்டை இதற்கு முன் 5 முறை ஆட்சி செய்த திமுகவுக்கு இது தெரியாத ஒன்றல்ல. தமிழகத்தின் நிதிநிலையை நன்றாக அறிந்திருந்ததால் தான், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த அதே நேரத்தில், தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்துவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதையெல்லாம் மறந்து விட்டு, நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறுவது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பது சிறந்த நகைச்சுவை ஆகும். மத்தியில் இந்தியா கூட்டணியால் ஆட்சியமைக்க முடியாது என்பது எப்போதோ தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அந்த நிலைமையில் இப்போதும் மாற்றம் இல்லை. எனவே, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதும், அத்தைக்கு மீசை முளைப்பதும் ஒன்றுதான். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியிருக்கிறார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மாநில அரசின் பொறுப்புதான். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான தேர்தலில் இந்த வாக்குறுதிகளை அளித்து, அரசு ஊழியர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று விட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் அவற்றை நிறைவேற்றுகிறோம் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்; உங்களை ஏமாற்ற நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்.


7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாட்டில் மட்டுமே நிதி நெருக்கடி நிலவவில்லை. அனைத்து மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ஆனாலும், கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், இமாலயப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமாகும் போது, தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. மாறாக, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே கூற வேண்டும்.


அடக்குமுறை இதுவரை இல்லை

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களுக்கு சிறந்த தண்டனை தோல்விதான். அதை திமுகவுக்கும் தர வேண்டும். 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு ஊழியர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்தார். அப்போது தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி, தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து போராடிய ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தார். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் வரலாற்றில் அரசு ஊழியர்களுக்கு எதிராக அதுபோன்றதொரு அடக்குமுறை இதுவரை ஏவி விடப்பட்டது இல்லை.

ஜெயலலிதா அரசின் அடக்குமுறைகளுக்கு பதிலடி தரும் வகையில் 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை 40 இடங்களிலும் அரசு ஊழியர்களும், மக்களும் வீழ்த்தினார்கள். அதனால், துவண்டு போன ஜெயலலிதா அரசு, அரசு ஊழியர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் படிப்படியாக திரும்பப் பெற்றது. ஒரு கட்டத்தில் அரசு ஊழியர்களின் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தார். அந்த வரலாறு இப்போது மீண்டும் திரும்புகிறது.

வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனைத்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை அரசு ஊழியர்களும், பொதுமக்களும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால், அதற்கு அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றும். ஆகவே அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே திமுக அரசின் தோல்வியையும், உங்களின் வெற்றியையும் வரும் 19ஆம் தேதி தேர்தலில் தீர்மானியுங்கள்.உங்கள் கோரிக்கையை வென்றெடுப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. எனவே, உங்கள் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, இந்த ஒருமுறை திமுகவை வீழ்த்த வாக்களியுங்கள்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.