திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அறிமுக கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இந்த வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்:


திண்டுக்கல் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக கூட்டணி கட்சியில் வேட்பாளராக எஸ்டிபிஐ  கட்சியை சேர்ந்த கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் திண்டுக்கல்லில் வேட்பாளராக தேர்தலில் களம் இறங்கியுள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



முன்னாள் அமைச்சர்களான கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். இதில் வேட்பாளர் பேசிய பொழுது,  தாய் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த தனக்கு முன்னாள் அமைச்சர்கள் இரு அப்பாக்களாக உள்ளனர் என பேசிய பொழுது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மனம் உருகி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். இது கட்சியினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


மக்களவைத் தேர்தலுக்காக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.