Erode East By Election:   அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 


அதிமுக இரு அணிகளாக களமிறங்க இரண்டு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்த பின்னர், இரு தரப்பில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று இபிஎஸ் தரப்பு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், அது வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரான செந்தில்முருகன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 




ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே அறிவித்திருந்தார். 


வேட்பாளர் அறிவிப்புக்கு பின் பேசிய ஓபிஎஸ், “ பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன்" என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இவர் இந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏவான மறைந்த திருமகன் ஈவெரா-வின் தந்தையும் ஆவார்.  இவரும் இன்று (03/02/2023) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது.  ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு உள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.,வான தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அமமுக சார்பில் சிவபிரசாத் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன்  ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவரகள் ஏற்கனவே வேட்புமனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நல்ல நாள் என கருதப்படுவதாலும் இன்று வேட்பாளார்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய படையெடுத்து வருகின்றனர். 


வேட்புமனு தாக்கலின் நான்காவது நாளான இன்று மட்டும் 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.