கோவை குனியமுத்துர் புதிய தமிழக கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. பின்னர் வலுவான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் வகிக்க வேண்டும் எனவும், கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அளிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பின்னர் டாக்டர்  கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழுவில் உள்ள 130 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தேர்தல் நிலவரம் குறித்து 12 கேள்விகளுக்கு பதில்கள் பெறப்பட்டது. அரசியல் கள நிலவரம் குறித்து கேட்கப்பட்டது. கூட்டணி குறித்து தீர்மானம் ஏற்கப்பட்டது. 2024ம் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது. நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியில் பங்குபெற திட்டமிட்டுள்ளோம். எண்ணிக்கையிலும் கொள்கையில் அடிப்படையிலும் புதிய தமிழகம் கட்சி வெற்றிப் பெறும். நாடாளுமன்ற தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க விரும்புகிறோம். இறுதி முடிவு ஏற்கப்படவில்லை.


தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்வதற்கு இப்போது இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி நிலை என்பது இன்று கேள்விகுறியாக உள்ளது. புதிய அரசியல் சூழல் நிலவுகிறது. புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாக செயல்பட நினைக்கின்றது. பாஜக அதிமுக கூட்டணி காலம் கடந்து விட்டது. அதைப்பற்றி பேசி பிரோஜனம் இல்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்ற முடிவுக்கு நாங்கள் வரவில்லை. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் சந்திப்பது இயல்பு. தமிழ்நாட்டில் இப்போது மூன்று அணிகளாக தான் உள்ளது. நாங்கள் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம். அதிமுக - திமுக - பாஜக என்று 3 கூட்டணிகளாக உள்ளது. இவை இன்று மிகவும் தெளிவாக உள்ளது. வலுவான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதன் எங்களுடைய நோக்கம். நல்லது யார் செய்தாலும் நாங்கள் பாராட்டி உள்ளோம். பிரதமர் வேட்பாளர் என்று கூறி தேர்தலை சந்திக்க தேவையில்லை. இதுபோன்ற நடைமுறை இந்தியாவில் இல்லை. மற்ற கூட்டணி குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை” எனத் தெரிவித்தார். நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, ”கட்சி  ஆரம்பித்தவுடன் உறக்கத்திற்கு சென்று விட்டார்கள். எழுந்திருக்கும் போது அதைப்பற்றி பேசுவோம்” எனப் பதிலளித்தார்.