முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவை, கலவையோ கலவை என்கிறபடி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 


எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்தவர்கள்




அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஈரோடு முத்துசாமி, சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தண்டராம்பட்டு எ.வ.வேலு ஆகியோர், முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். இவர்களில் முத்துசாமி 1977-ல் அமைந்த எம்.ஜி.ஆரின் முதல் அமைச்சரவையில் இளம்வயது அமைச்சராக இடம்பிடித்தார். சாத்தூர் ராமச்சந்திரனும் தண்டராம்பட்டு வேலுவும் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களே. 


 


கருணாநிதியுடன் வாதம்புரிந்த எ.வ.வேலு




கூட்டுறவுத் துறை அமைச்சராக 80-களின் செய்தித்தாள்களில் கட்டை மீசையுடன் சாத்தூர் ராமச்சந்திரன் என கொட்டை எழுத்துகளில் முழுப் பக்க விளம்பரம் கொடுப்பதை அன்றைய அரசியலைப் பார்த்தவர்களிடம் கேட்டால் கதைகதையாகச் சொல்வார்கள். எ.வ. வேலுவைப் பற்றி குறிப்பிடத்தக்க ஒரு சேதி, சட்டமன்றத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, கள்ளச்சாராயப் பிரச்னை தொடர்பான விவாதத்தில், எம்ஜிஆருடன் சேர்ந்து நடத்திய விவாதம் கடந்துபோன சட்டமன்ற சுவாரஸ்யங்களில் முக்கியமானது. 


சட்டமன்றத்தில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வன்முறையில், ஜெயலலிதாவின் பக்கம் நின்று அவரைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்றவர்களில் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரும் சாத்தூர் ராமச்சந்திரனும்தான். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மிக மோசமான கசப்பான அனுபவத்தால் திமுகவுக்கு வந்தார், ராமச்சந்திரன். 2006ஆம் ஆண்டில் திமுகவின் ஐந்தாவது ஆட்சியில் சுகாதாரத் துறையின் அமைச்சராகப் பதவிவகித்தார். உணவுத்துறை அமைச்சர் பதவியில் வேலு இருந்தார். ஈரோடு முத்துசாமியும் 1991-ல் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். 


ஜெயலலிதா அமைச்சரவை சகாக்கள் 




ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் அமோகமாக வெற்றிபெற்ற அதிமுக ஜெயலலிதாவின் அமைச்சரவையில், முக்கிய அமைச்சராக பொதுப்பணித்துறை, மின்சாரம் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். பிறகு, தனியாக மக்கள் தமிழ் தேசம் எனும் கட்சியைத் தொடங்கி, திமுகவுக்கு வந்து மீண்டும் அதிமுகவுக்கு தாவி மீண்டும் திமுகவுக்கு வந்து, நீண்ட காலத்துக்குப் பிறகு அமைச்சராக ஆகியிருக்கிறார், கண்ணப்பன். 


ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1991 காலகட்டத்தில் இருந்த ரகுபதி, திமுகவுக்கு வந்து மத்திய அமைச்சராகவும் ஆனார். இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநில அமைச்சராக ஆகியிருக்கிறார். 


இவர்களைப் போல, 2001ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பிடித்த அனிதா ராதாகிருஷ்ணன், இப்போதைய ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் அமைச்சரவையின் முழுக்காலமும் அமைச்சராகப் பதவிவகித்தவர்களில் ஒருவர், கரூர் செந்தில்பாலாஜி. அப்போதும் முக்கிய துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் போக்குவரத்துத் துறையை கவனித்த இவர், இப்போது மின்சாரம் மற்றும் டாஸ்மாக்கைக் கொண்ட மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை என இரண்டு துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார். 


அமைச்சராக இல்லாதபோதும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வடசென்னை சேகர்பாபு, திமுகவுக்கு மாறி அக்கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக இப்போது சட்டமன்ற உறுப்பினராகி, முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். 


முன்னாள் அமைச்சர்கள் எனப் பார்த்தால், கருணாநிதி தலைமையிலான ஐந்தாவது திமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 17 பேர் மீண்டும் அமைச்சராகி உள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த தமிழரசி, இந்தத் தேர்தலில் வென்றும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 


புதியமுகங்கள்:  சேகர்பாபு உள்பட 15 பேர் முதல் முறையாக அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர்.  


2 பெண்கள்: கடந்த முறை அமைச்சராக இருந்த கீதா ஜீவன், தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனைத் தோற்கடித்த கயல்விழி இருவரும் ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.