இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில்தான் சிறப்பாக உள்ளதாகவும் இங்கு சட்டத்தின் ஆட்சி நடந்து வருவதாகவும் திமுக மூத்த தலைவர் அப்பாவு பேசியதற்கு, நெட்டிசன்கள் அடித்து வெளுத்து வருகின்றனர்.
தேர்தல் பணியில் கட்சிகள்
தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில், திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதற்கான நேர்காணலில் முன்னாள் சபாநாயகரும் ராதாபுரம் எம்எல்ஏவுமான அப்பாவு கலந்துகொண்டார்.
சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான்
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, ''நேர்காணல் குறித்து எதுவும் கேட்க வேண்டாம். அது ரகசியம். இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான்.
இங்கு எந்த ஊரிலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை. எந்த ஊரில் பேருந்து செல்லவில்லை, ரயில் செல்லவில்லை? பொது மக்கள் அன்றாடப் பணி செய்ய முடியவில்லை என்று எந்த ஊரில் இருக்கிறது?
இரும்புக் கரம் கொண்டு அடக்கும் முதல்வர்
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்குகின்றன. எல்லா நிர்வாகமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. தனிப்பட்ட முறையில் சில முன் விரோதம் காரணமாக சில சம்பவங்கள் நடக்கின்றன. அதை முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறார்.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான், சட்டத்தில் ஆட்சி நடப்பதும் தமிழ்நாட்டில்தான்.
ஆகவேதான் முதலீட்டாளர்கள் இந்திய அளவில் அல்ல உலக அளவில் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். நம் முதல்வரின் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் 11.19 சதவீத வளர்ச்சி எப்படி வந்தது?
ஒரு இடத்தில் மட்டும் தொழில் வளரவில்லை
நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் மட்டும் தொழில் வளரவில்லை. திருநெல்வேலியில் டாடா மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தார்கள். தூத்துக்குடியில் கார் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மினி டைடல் பார்க்கை ஆரம்பித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன'' என்று அப்பாவு தெரிவித்தார்.
அப்பாவு கண்ணுக்குத் தெரியவில்லையா?
இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், தினந்தோறும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள், வழிப்பறி சம்பவங்கள், கொலை, கொள்ளை முயற்சிகள் ஆகியவை அப்பாவு கண்ணுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் செய்தித்தாளோ, தொலைக்காட்சியோ பார்ப்பதில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
