தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது, இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி வாரியாக தீவிரமாக நடைபெற்று வருகிறது, குறிப்பாக நெல்லை மாவட்டத்திலும், ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், கட்சி வாரியாக ஒவ்வொரு வார்டுக்கும் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யும்   பணியிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை  1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகள் உள்ளன, நெல்லை மாநகராட்சியில்  மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் 55 வார்டுகளிலும் போட்டியிட நேற்று வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் 7 வார்டுகள் மட்டுமே தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தது,  இதனால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் திமுக மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.




இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் காங்கிரசார் இன்று மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,  அப்போது திமுக கூட்டணியில் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும், 8 இடங்களாவது ஒதுக்க வேண்டும் இல்லாவிட்டால் தலைமையிடம் அனுமதி பெற்று தனித்து போட்டியிடுவோம் என்று முடிவு செய்தனர், இதுகுறித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, எந்த ஒரு பிரச்சினை என்றாலும் தோழமை கட்சிக்கு துணை நின்று போராடி இருக்கிறோம், திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக-காங்கிரஸ் இடையே ஒரு முறை மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதன் பின்பு எவ்வித பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.




அதன் பின் எங்களிடம் பேசாமல் திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகளில்  வெறும் 3 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர். நெல்லையில் 4 மண்டலம் உள்ளது. ஒரு மண்டலத்திற்கு 2 சீட் சென்றாலும் 8 சீட் கேட்டோம், அது கிடைக்கவில்லை. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 3 இடங்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லை, காங்கிரஸ் கட்சியின் தலைமை, திமுக தலைமையுடன் பேசி திருநெல்வேலி மாநகராட்சியில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்கான இடங்களைப் பெற்று தரவேண்டும், வெறும் 3 இடங்களில் மட்டும் போட்டியிட காங்கிரஸ் தயாராக இல்லை, காங்கிரஸ் கட்சியின் தலைமையே சொன்னாலும் மூன்று இடங்களில் போட்டியிட போவதில்லை, இல்லையெனில் திருநெல்வேலி மாநகராட்சியில் தனித்து நின்று  போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைமை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.




மேலும் இது குறித்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறிய அவர்,  திருநெல்வேலி மாநகராட்சியின் தனித்துப் போட்டியிட தலைமை அனுமதி அளித்தால் 36 இடங்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவோம், வெள்ளையர்களை வெளியேற்றிய காங்கிரஸ் பேரியக்கம் தன்மானத்தோடு சுயமரியாதையோடும் இருக்க விரும்புகிறது, ஆனால் காங்கிரசுக்கு உரிய அங்கீகாரம் திமுக வழங்கவில்லை என்றார். அதே போல  தலைமை சொன்னால் திமுகவிற்கு தேர்தல் பணியாற்றுவோம் என்றும் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நெல்லையில் திமுக - காங்கிரஸ் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,