காரிமங்கலம் பகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்-2022 முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராக உள்ளாட்சி பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு  இன்று நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் காரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு 19-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு பைசுஅள்ளி கிராம ஊராட்சியிலும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் பேளாரஅள்ளி கிராம ஊராட்சியில் காலியாக உள்ள 8-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு  மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொரப்பூர் கிராம ஊராட்சியில் காலியாக உள்ள 4-வது மற்றும் 7-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று 09.07.2022 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று மாலை 6.00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகின்றது.

 

 இதனை முன்னிட்டு காரிமங்கலம், பைசுஅள்ளி கிராம ஊராட்சிக்குட்பட்ட கெங்குசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி இத்தேர்தல் வாக்குப்பதிவினை சிறப்பாக நடைபெற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அலுவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் வாக்குச் சாவடிகளில் உள்ள அரசியல் கட்சி முகவர்கள் வாக்காளர்களை சரியான முறையில் சரிபார்த்து அனுப்ப வேண்டும் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த வாக்கு பதிவு மையங்கள் மற்றும் தேர்தல் பணிகளில் பாலக்கோடு டிஎஸ்பி தினகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்  துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி செயலர் / உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான காரிமங்கலம் வட்டார தேர்தல் பார்வையாளர் எம்.மாரிமுத்துராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை)/ தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.லோகநாதன், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெ.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.