அம்மாவின் ஆட்சி அமைப்போம் என சொன்னவர்களின் சாயம்  வெளுத்து வருவதாக சசிகலா கட்சி தொடங்கியது தொடர்பான கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக பதிலளித்துள்ளார். 

Continues below advertisement

அதிமுக - அமமுக கூட்டணி

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரு மாதங்கள் உள்ளது. இப்படியான நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது. இந்த கூட்டணியில் அமமுக, பாஜக, தமமுக, தமாகா, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி, பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கிறது. அதேசமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் திமுகவிலும், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திலும் ஐக்கியமாகியுள்ளனர். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நின்ற ஓ.பன்னீர்செல்வம் என்ன மாதிரியான முடிவெடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும், அதிமுகவின் முக்கிய புள்ளியாகவும் இருந்த சசிகலா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான அறிமுக கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

Continues below advertisement

இதில் கலந்து கொண்ட சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த சம்பவங்களை எல்லாம் பட்டியலிட்டு பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலா புதிய கட்சி - டிடிவி தினகரன் விமர்சனம்

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது சசிகலா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்சி அறிவிப்பு பற்றியும், அண்ணா-எம்ஜிஆர்- ஜெயலலிதா புகைப்படங்கள் அடங்கிய கொடியை அறிமுகம் செய்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதாவது அதிமுக, அமமுகவில் தான் 99.9 சதவிகித தொண்டர்கள் உள்ளனர். நாங்கள் ஓரணியில் இணைந்து விட்டோம். மற்றவர்களை பற்றி பிரச்னையில்லை. சுதந்திர இந்தியாவில், ஜனநாயக நாட்டில் யாரும் எதுவேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் தொடங்கலாம். திடீர் சாம்பார், திடீர் இட்லி போல திடீர் கட்சிகள் வரலாம். அம்மாவின் ஆட்சி அமைப்போம். அம்மாவின் கட்சியை ஒன்றிணைப்போம் என சொன்னவர்கள் சாயம் வெளும் நேரம் வந்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் 35 ஆண்டுகளாக எனக்கு மட்டும் தெரிந்த சில நபர்களின் உண்மை சுயரூபம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய வந்து கொண்டிருக்கிறது. 

அதனால் சீப்பை ஒளித்து வைத்து விட்டாலோ அம்மாவின் ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது.  நெல்மணிகள் தோட்டத்தில் விளைந்துஅறுவடைக்குத் தயாராக உள்ளது பதர்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காக்கா குருவிகள் நெல்மணிகளை சிலவற்றைக் கொத்திச் செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.