தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5 ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. தேர்தல் நெருங்கிவருவதை அடுத்து அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.




நடிகர் செந்தில் பிரசாரம்..


மதுரை மாநகராட்சி புதூர், நரிமேடு உள்ளிட்ட அனைத்து வார்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நீட், கொரோனா ஒழிப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசினார். பிரசாரத்தில் பேசிய செந்தில், '' மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம்மையெல்லாம் அச்சுறுத்திய கொரோனாவை ஒழிக்க பிரதமர் மோடி கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.  ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற பாஜக உள்ளாட்சியிலும் வெற்றி பெறவேண்டும். அரசியல் செய்யவே நீட் தேர்வு வேண்டாமென எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். நீட் தேர்வால்தான் தமிழ்நாட்டில் முன்பை விட தற்போது அதிக மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருகின்றனர். எனவே நீட் தேர்வு அவசியமானது''  என்றார்.


கோவையில் ஹெல்மெட்டுடன் வாக்கு சேகரிப்பு..


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் 76 வது வார்டில் பாஜக சார்பில் கார்த்திக் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அந்த வார்டில் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் முனீஸ்வரன் என்ற பாஜக தொண்டர் காயமடைந்தார். இது தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 




இந்நிலையில் பாஜகவினருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறி, பாஜக வேட்பாளர் கார்த்திக் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஹெல்மட் அணிந்தும், கைகளில் தாமரை பூக்களை ஏந்தியபடியும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். பேரூர் மெயின் ரோடு சாஸ்தா நகர், முனியப்பன் நகர், பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் பாஜக தொண்டர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.




Local body election | 25 ஆண்டுகளாக போட்டியின்றி வேட்பாளரை தேர்வு செய்யும் கிராமம்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண