சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த பிரத்யேக கருத்துக்கணிப்பு ஒன்றைய ABP Newsக்காக CVoter நடத்தியது. அதில், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று மக்களிடையே கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவராகவும், நாட்டின் பிரதமர் பதவிக்கான மிகவும் விருப்பமான தேர்வாகவும் இருக்கிறார்.


அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உட்பட, வரவிருக்கும் தேர்தல்களுக்கு பிரதமர் மோடி தயாராகி வருவதால், சத்தீஸ்கர் மாநிலத்தின் மனநிலையை அறிய இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பானது கடந்த ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 19 வரை சத்தீஸ்கர் முழுவதும் சுமார் 7, 696 பேரிடம் நடத்தப்பட்டது. 


அதில், ராகுல் காந்தியை 40 சதவீதத்துக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்து பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்று ஏபிபி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 


சத்தீஸ்கரில் காங்கிரஸ் 48 முதல் 54 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டாலும், பாஜகவுக்கு நல்ல செய்தி என்னவென்றால், பிரதமர் மோடியின் செல்வாக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் வலுவாக உள்ளது என்பதுதான். 


பிரதமர் பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதில் 62 சதவீதம் பேர் நரேந்திர மோடிதான் பிரதமராகத் தங்களின் முதன்மைத் தேர்வு என்று கூறியுள்ளனர். 19 சதவீத வாக்குகளுடன் ராகுல் காந்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். 


தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 5 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், யோகி ஆதித்யநாத் 2.8 சதவீத வாக்குகளுடன் நான்காவது  இடத்திலும், மம்தா பானர்ஜி 2.7% சதவீத வாக்குகளுடன் ஐந்தாவது  இடத்திலும் உள்ளனர். 


பிரதமர் வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள் மொத்தமாகவே 8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர். 


பொறுப்பு துறப்பு:


(தற்போதைய கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் கணிப்புகள், CVoter Pre Poll மூலம் தனிப்பட்ட நேர்காணல்கள் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 18+ பெரியவர்கள், உறுதிப்படுத்தப்பட்ட வாக்காளர்கள், விவரங்கள் இன்றைய கணிப்புகளுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இது முழுவதும் கணிக்கப்பட்டவையே தவிர, 100 சதவீதமாக இருக்க வாய்ப்பில்லை. தொகுதிகளின் வெற்றி வாய்ப்பின்படி முன்போ, பின்போ சில மாற்றங்கள் ஏற்படலாம். இது வெறுமனமே கருத்துக்கணிப்பே தவிர, இதற்கு ஏபிபி எந்தவிதத்திலும் பொறுப்பு ஏற்காது)