முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது.


முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி  தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்த மாநாடு தள்ளிப்போன நிலையில், இன்று (ஆக.30) கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.


21 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு 


தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பிற உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். 


உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள், பாடத்திட்டங்கள் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம் அமலாக்கம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மாநில அரசு அமைந்த பிறகு, ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்றது. உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதே நேரத்தில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கடந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா 


பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக வெளிநடப்பு செய்தது. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது. 





Published at: 30 Aug 2022 11:35 AM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.