கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள அண்ணா வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்ட மேற்படிப்பு விண்ணப்பத்திற்கான இணையதள சேவையை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி, ”2022-23ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்டப்  படிப்புகள் மற்றும் பி.எச்.டி விண்ணப்ப இணைதள சேவை துவக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் அவர்கள் என்ட்ரோல் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போர்ட்டல் செயல்படும். அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கும் செயல்முறைகளை முடித்து கொள்ள வேண்டும். மாணவர்கள் முதலில் PC(Provisional Certificate) கொண்டு விண்ணப்பிக்கும் முறைகளை மேற்கொள்ளலாம்.




ஓரிரு மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளவர்கள் அவர்களது டீனிடம் கடிதம் பெற்று அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் அம்மாணவர்கள் சேரும் போது அசல் PC இருந்தால் தான் சேர முடியும். https://admissionsatoffshoot.tnau.ac.in/ என்ற இணைய முகவரி மூலம் எண்ட்ரோல் செய்து கொள்ளலாம். Msc யை பொறுத்தவரை 32 ப்ரோகிராம்ஸ் உள்ளது.  பி.எச்.டி யை பொறுத்தவரை 28 ப்ரோகிராம்ஸ் உள்ளது. இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 8 கல்லூரிகளிலும் நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 11ம் தேதி என்ட்ரோல் செய்த மாணவர்களுக்கு நோட்டிபிகேசன் தந்து விடுவோம். அதனை தொடர்ந்து இரண்டு நுழைவுத் தேர்வுகள் வைக்கப்படும்.


ஒரு நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 27ம் தேதியும், 28ம் தேதி மற்றொரு நுழைவுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும். அதனையடுத்து செப்டம் 2வது வாரத்தில் மாணவர்களை முடிவு செய்து விடுவோம்.  3வது வாரத்தில் மாணவர்கள் கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். அதனையடுத்து அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரி செயல்பட துவங்கி விடும்.


பல்வேறு நாடுகளில் இணைந்து செயல்படுவதாகவும் இங்கு பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளிலும் படிக்க மற்றும் ஆராய்ச்சிகள் செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படுகிறது. இந்தியாவில் 40 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். இதனால் ஆராய்ச்சியின் தரம் உயர்ந்து வருகிறது. வழக்கமாக வருடத்திற்கு 400 பேர் முதுகலை படிப்பிற்கும், 200 பேர் பி.எச்.டிக்கும் எடுப்போம். இம்முறை எவ்வித புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தவில்லை. நாளை (இன்று) இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.




குளோபல் கான்பிரன்ஸை ஜூலை 19 மற்றும் 20ம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் நடத்தப்பட உள்ளது. இதனால் சிறந்த முதல் 100 மாணவர்களை கொண்டு விவசாயத்தை ஊக்குவிப்பது குறித்தும், தொழில் முனைவோர் ஆக்குவதற்கும் ஆலோசனைகள் வழங்க உள்ளோம். இதில் மாணவர்கள் அவர்களது படைப்புகளை விளக்கி அதில் தேர்வு செய்யப்படுவோர்க்கு தொழில்முனைவோர் ஆவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தர உள்ளோம். 


சதர்ன் குயீன்ஸ்லாந்து உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டீ, காபி, மாம்பழம், கரும்பு, காட்டன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு ஆண்டு அங்கு சென்று மாணவர்கள் படிப்பார்கள். வருடத்திற்கு 2 மாணவர்கள் அங்கு சென்று படிப்பார்கள். இதனால் அங்குள்ள தொழில்நுட்பங்கள் தெரிந்து கொண்டு, இங்கு அதனை செயல்படுத்த வாய்ப்புள்ளது. மழைப் பொழிவை பொருத்தவரை, கோவை மலைமறைவு பகுதியில் உள்ளதால், தென்மேற்கு பருவ மழை 4 மாதங்களுக்கு சேர்ந்து 140 மிமீ தான் மழை பொழிவு இருக்கும். புவி வெப்பமயமாதலால் மழைப் பொழிவு நாட்கள் குறையும். மழையின் அளவு குறைய வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண