2021ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், முதல் 3 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். 


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.


தேர்வு முறை எப்படி?


முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. 


தேர்வு நடைபெற்றது எப்போது?


முன்னதாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி யூபிஎஸ்சி சிஎஸ்இ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் சில தினங்களிலேயே அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்றது. தேர்ச்சி பெற்றோருக்கான முதன்மைத் தேர்வு, 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியாகின. 


முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நேர்முகத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வு மே 26 வரை நடைபெற்றது. இந்நிலையில் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று (மே 30ஆம் தேதி) வெளியாகி உள்ளன. 


தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?


upsc.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.
UPSC Civil Service final result 2021 என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்
பிடிஎஃப் வடிவில் இருக்கும் பக்கத்தைத் திறக்கவும் 
தரவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.


கடந்த ஆண்டில் 712 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 2020ம் ஆண்டில் 796 காலிப் பணியிடங்களும், 2019ம் ஆண்டில் 896 காலிப்பணியிடங்களும், 2018ல் 782 காலிப் பணியிடங்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன. 2022ஆம் ஆண்டில் மட்டும் 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம். 


இந்நிலையில் 2021ஆம் ஆண்டுகான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், முதல் 3 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். இதில் ஸ்ருதி சர்மா என்னும் பெண் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.