முறைகேடு புகார்களில் சிக்கிய பூஜா கேத்கர் என்னும் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைக் கிளப்பிய அதே வேளையில், யுபிஎஸ்சி வட்டாரத்திலும் புயல் கிளம்பியது. அதற்குக் காரணம் 2022ஆம் ஆண்டு குடிமைப் பணியியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர் என்னும் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி. இவர் தன்னுடைய சாதி, பெற்றோர், பார்வைத் திறன் ஆகியவற்றில் போலியாக ஆவணங்களை மாற்றி, பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் மோசடி செய்து, பணியில் சேர்ந்ததாகப் புகார் கூறப்பட்டது. 


இந்த நிலையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. தனது பதவியைத் தவறுதலாகப் பயன்படுத்திய புகாரில், மகாராஷ்டிர அரசு அவரைப் பதவி நீக்கம் செய்தது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.