Stock Market Update: இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகளானது ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.


இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 261.95 புள்ளிகள் அதிகரித்து 60,018.79 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 68.85  புள்ளிகள் அதிகரித்து 17,805.80 புள்ளிகளாக உள்ளது.






உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும் வீழ்ச்சியில் சென்றிருந்த பங்குச் சந்தைகள், கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளன.


லாபம்- நஷ்டம்


வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, பிஎன்பி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


எஸ்பிஐ கார்டு, டாடா கெமிக்கல்ஸ், வேதாந்தா, இந்துஸ் டவர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


மந்த நிலை


உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது.
இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அந்நிய  முதலீட்டாளர்கள், வெளியே செல்ல ஆரம்பித்தனர்.


இதனால் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் பெரும் வீழ்ச்சியடைந்து ரூ. 83 ஐ கடந்து சென்றது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை டாலர்களில் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


வலுவடையும் ரூபாய் மதிப்பு:


இந்நிலையில், கடந்த சில தினங்களாக பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இதையடுத்து ரூபாய் மதிப்பு, டாலருக்கு எதிராக சற்று வலுவடைந்து வருகிறது.