தஞ்சாவூர்: மத்திய பல்கலைக்கழகங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் சரி சமமாக சேரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.



தஞ்சை அருகே திருமலை சமுத்திரம் சாஸ்திரா நிகழ்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய கல்விக் கொள்கை  மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட மிக உயரிய பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருக்கின்றன.  சென்னை ஐஐடி உள்ளிட்ட மிகச் சிறந்த மத்திய கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இதன் மூலம், இங்கு மிகச் சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, திறமையான மனித வளம் உருவாக்கப்படுவதால், தொழில் ரீதியாகவும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

மாணவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு சுதந்திரம், நெகிழ்வுத்தன்மை மற்றும் தேர்வுகளை வழங்குவதே ஆகும். அது கிராமப் பின்னணியில் இருந்து இருக்கலாம், நகர்ப்புறங்களில் இருந்து இருக்கலாம், எந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியிலிருந்தும் இருக்கலாம்.

ஆனால் உலக அளவில் கல்வித் துறை போட்டி நிறைந்ததாக உள்ளது. எனவே உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு இணையாக நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் சிறந்த அனுபவங்களை பெறும் வகையில் நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இருந்து மாணவர்கள் சேர்க்கை முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் சரி சமமாக சேரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உ,ள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்