TNSGT: 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத காலியிடங்கள்; அறிவுச் சுரண்டலா?- இடைநிலை ஆசிரியர்கள் வேதனை!
கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பல்லாண்டுகளாக நிரப்பப்படவில்லை என்று இடைநிலை ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த 12 ஆண்டு காலமாக இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி TNSGT அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
Just In




நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 2 ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை மட்டும் நிரப்புவதற்காக, கடந்த 21.07.2024 அன்று நியமனத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
ஏற்கெனவே தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறாமல் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்துக் கிடக்கின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை, இடைநிலை ஆசிரியர்கள் பணிநிறைவு (ஓய்வு), பதவி உயர்வு பெற்றதால், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின்படி தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே செல்கிறது.
குறைந்த ஊதியத்தை கொடுத்து சரிகட்டுவதா?
தமிழக அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்த காலிப் பணியிடங்களை நிரப்பாமல், மூடி மறைக்கிறது. மேலும் இதனை, தற்காலிகப் பணி நியமனம் மூலம், இளைஞர்களுக்கு குறைந்த ஊதியத்தை கொடுத்து, அரசு சரிகட்டப் பார்கிறது.
அறிவு உழைப்பை சுரண்டுவதா?
அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் குறைந்த ஊதியத்தில் இளைஞர்களை நியமனம் செய்து, அவர்களது அறிவு உழைப்பை சுரண்டும் செயலை அரசு செய்துவருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதில் தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வர்கள் (TNSGT) அமைப்பை சேர்ந்தவர்கள், இன்று பள்ளிக்கல்வி துறை அலுவலர்களை சென்னையில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.