தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் பதிவேற்றத்தை நவம்பர் 7ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை மேற்கொள்வது எப்படி என்றும் டிஎன்பிஎஸ்சி வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 07/2025 நாள் 25.042025-ல் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள் தேர்விற்கான முடிவுகள் தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தேர்வர்களின் பட்டியல்
இந்த நிலையில் கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட (வனக்காப்பாளர். ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் பழங்குடி இளைஞர் பதவிகள் நீங்கலாக) தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 29.10.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 29.10.2025 முதல் 07.11.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் தெரிவின் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. எனினும் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.