3935 பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 24ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.

அரசு துறைகளில் அடிப்படை பதவிகளான இளநிலை உதவியாளர்‌, தட்டச்சர்‌, சுருக்கெழுத்து தட்டச்சர்‌, நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர், விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்‌,  வனக் காப்பாளர்‌ மற்றும்‌ வனக்காவலர்‌ உள்ளிட்ட இடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.  இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்புதான் என்பதாலும் ஒரே ஒரு தேர்வு மட்டுமே என்பதாலும், ஏராளமான தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

10ஆம் வகுப்பை முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் . எனினும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில், இளநிலை உதவியாளர்‌, தட்டச்சர்‌, சுருக்கெழுத்து தட்டச்சர்‌, நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது நிறைந்திருந்தால் போதுமானது.

அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே மாற்றுத் திறனாளிகளுக்கு 42 ஆகவும் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 ஆகவும் கைம்பெண்களுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தட்டச்சர் பணிகளில் சேர, அரசு தொழில்நுட்ப தமிழ் அல்லது ஆங்கிலத் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

ஓஎம்ஆர் முறையில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும்.

பகுதி அ- தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு – 150 மதிப்பெண்களுக்கு

பகுதி ஆ – பொது அறிவு

பகுதி இ – திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு – ஆ, இ இரண்டும் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடக்கும். 

ஜூலை 12 தேர்வு

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று (மே 24) இரவு 11.59 மணியுடன் முடிகிறது. விண்ணப்பங்களில் திருத்தங்களை மே 29 முதல் மே 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை மேற்கொள்ளலாம்.

கடைசி நிமிடத் தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது. முன்னதாக, இதற்கு ஏப்ரல் 25ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூலை 12ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேர்வர்கள் முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • ஒரு முறைப் பதிவில் பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கும்போது, நம்மிடம் பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்திருக்க வேண்டும்.
  • அதேபோல ஒரு முறைப் பதிவுடன் ஆதாரை இணைக்க வேண்டும்.
  • தொடர்ந்து APPLY என்ற பகுதியைச் சொடுக்கி, போதிய விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முழு விவரங்களை  https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20IV%20Tamil.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/