குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் உத்தேச விடைக் குறிப்பை  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கடந்த மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  


இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.


இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இம்மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.


குரூப் 4 தேர்வுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயங்கின.


இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/Tentative/Document/CCS4T_2022_OPT.pdf என்ற இணையதள முகவரியில் உத்தேச விடைக் குறிப்புகளைக் காணலாம். இதில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை, மறுப்பு இருந்தால், ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆட்சேபனைகளை அனுப்புவது எப்படி?


தேர்வர்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஆன்லைன் மூலமாக மட்டுமே தெரிவிக்க முடியும். கடிதம் அல்லது இ-மெயில் மூலம் அனுப்பப்படும் ஆட்சேபனைகள் கணக்கில் கொள்ளப்படாது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களையும் ஆட்சேபனைகளையும் அனுப்ப முடியும். 


தேர்வர்கள் அனுப்பும் ஆட்சேபனைகளை, டிஎன்பிஎஸ்சி வல்லுநர் குழு கொண்டு ஆய்வு மேற்கொள்ளும். அதில் தவறுகள் இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படும். 


தேர்வர்கள் தங்களுக்குத் தேர்வின்போது வழங்கப்பட்ட கேள்வித் தாளை அடிப்படையாகக் கொண்டு, கேள்வி எண்களைக் கருத்தில் கொள்ளக்கூடாது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் உத்தேச விடைக் குறிப்பில் உள்ள கேள்வி எண் வரிசையிலேயே கேள்வி எண்களைக் குறிப்பிட வேண்டும். 


அதேபோல தேர்வர்கள் தங்களின் பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்ட பிறகே, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண