உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, 2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், https://www.tnpsc.gov.in/english/Checkresult.aspx?key=ede8bcfb-eafa-4610-ab46-23f6b4f48822&&id=4DE989AF-A312-4392-9839-F25F93175072 என்ற இணைப்பை க்ளிக் செய்து தங்களின் மதிப்பெண்களைக் காணலாம்.


2022ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு


அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த  குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது.


பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. 


ஜனவரி மாதம் முதன்மைத் தேர்வு முடிவுகள்


முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகின. 


இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, வேலையில் சேர்ந்து விட்டனர். எனினும் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்று புகார் எழுந்தது. இதைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தேர்வர்களின் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 




இதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் 2022 குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.


தேர்வர்கள், https://www.tnpsc.gov.in/english/Checkresult.aspx?key=ede8bcfb-eafa-4610-ab46-23f6b4f48822&&id=4DE989AF-A312-4392-9839-F25F93175072 என்ற இணைப்பை க்ளிக் செய்து தங்களின் மதிப்பெண்களைக் காணலாம். எனினும் தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டியது அவசியம். 


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/