குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். 


5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப் 7 பி மற்றும் குரூப் 8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த  குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து  இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. 


77 காலியிடங்கள் கொண்ட  குரூப் VII-Bக்கான தேர்வு அறிவிப்பு கடந்தாண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடைபெற்றது. அதேபோல் குரூப் -8 தேர்வுகளுக்கான அறிவிப்பு மே மாதம் 20 ஆம் தேதி வெளியாகி தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.