Tnpsc குரூப் 2, 2 a, மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சி தொடங்குகிறது என்று டாக்டர். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் அறிவித்துள்ளது. இந்த வகுப்புகள் ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளன.
இதுகுறித்து சென்னை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறி உள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்தடுத்து வெளியிடவிருக்கும் அறிவிக்கையில் உள்ள TNPSC குரூப் 2, 2ஏ, 4 ஆகிய தேர்வுகளுக்கு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் கட்டணம் இல்லாமல் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியை அளிக்க உள்ளோம்.
1300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரசுப் பணி
புதிதாக TNPSC போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள் வெற்றிக்கு பெரிதும் பயன்படுவதாக அமையும். மாணவர்கள் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு வழிகாட்டியாக பொதுத் துறையில் உள்ள இன்ஷியுரன்ஸ் துறை அலுவலர்களை உள்ளடக்கிய அகில இந்திய இன்ஷியுரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பில் வெளிவந்துள்ள 70,000 காலிப்பணியிடங்கள் இவ்வாண்டில் ( 2025 ) நிரப்ப பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2, 2ஏ, மற்றும் 4 காலிப்பணியிடங்களுக்கு மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் வகுப்பானது உடனடியாக தொடங்கப்பட உள்ளது.
துறைசார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை
இம்மையம் தொடர்ந்து அதிகப்படியான வெற்றியாளர்களை உருவாக்கி வரும் கலந்துரையாடல் வகையிலான வகுப்பானது (Test with discussion method), மாணவர்களின் திறமைகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எல்லாத் தகவல்களும் குழு விவாதத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவ்வப்போது துறைசார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளும் மாணவர்களிடையே பகிரப்படுகிறது.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
எங்கே? எப்போது?
சென்னை- 1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து (கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் 12.04.2025 சனிக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்பு நடைபெறும். தேர்வெழுத முழுத் தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மற்றும் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலுடன் வர வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களை 63698 74318, 952431820797906 10961, 94446 41712 எண்களில் தொடர்பு கொண்டும் பெறலாம் என்று அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது.