நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிபுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவும் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் நீட் விலக்கு வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்தியது.
2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது. பின்னர் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்ட மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது திமுக அரசு. அது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்றட்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம் முடிந்துவிடவில்லை. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். இது தொடர்பாக அனைத்து சட்டம்னற கட்சி தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனை கூட்டம் வரும் 9ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும்” என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயல்கத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 11 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அதிமுக, பாஜக பங்கேற்காது என தெரிகிறது.