உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட தமிழக அரசின் உயரிய பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 27) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுகின்றனர். 

அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு மார்ச் 28 முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு நாளை (ஏப்ரல் 27ஆம் தேதி) வரை ஒரு மாதத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

90 காலி இடங்கள்

குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  

என்னென்ன பணியிடங்கள்?

வ.எண் பணியிடத்தின் பெயர் காலி இடங்கள்
1 துணை ஆட்சியர் 16
2 துணை காவல் கண்காணிப்பாளர் 23
3 உதவி ஆணையர் (வணிக வரித்துறை)

14

4 துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள்

21

5 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர்

14

6 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

1

7 தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மாவட்ட அலுவலர்

1

  மொத்தம்

90

வயது வரம்பு என்ன?

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 34-க்குள் இருக்க வேண்டும்.  இதில் எம்பிசி, டிசி, பிசி முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி தேர்வர்களுக்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கைம்பெண்களுக்கும் 39 வயது உச்சபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தேதிகள்

குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏப். 27 இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி இரவு 11.59 வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 வரை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் முதன்மைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தேர்வு முறை

* முதல்நிலைத் தேர்வு

* முதன்மைத் தேர்வு

* நேர்காணல்

முதல்நிலைத் தேர்வு – பொதுப் பாடத்திட்டம்  (175 கேள்விகள்), ஆப்டிட்யூட் தேர்வு (200 கேள்விகள்) – மொத்தம் 300 மதிப்பெண்கள். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் ஆன்லைன் மூலம் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/