பொறியியல் முதல்கட்டக் கலந்தாய்வில் 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் 3,100 இடங்கள் அதிகமாக உள்ளன. 1,78,959 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் கலந்தாய்வில் இடம்பெற உள்ளனர்.  அங்கீகாரம் பெற்ற 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த உள்ளன. 


சிறப்புப் பிரிவுக்கு 1, பொதுப் பிரிவுக்கு 2 என மொத்தம் 3 கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்பக் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இணையதள வாயிலாக நடைபெறும் துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


செப்டம்பர் 11 வரை கலந்தாய்வு 


அருந்ததியர்களிடம் இருந்து காலியாக உள்ள இடங்களை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்டம்பர் 10, 11ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இறுதி நாள் கலந்தாய்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. 


இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல்கட்டக் கலந்தாய்வில் 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ’’பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 22 ஆயிரம் பேரில், 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 15490 பேர் இதுவரை கல்லூரியில் சேர இசைவு அளித்துள்ளார்கள். அதில் 7,305 பேர் ஓ.சி. பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பி.சி. பிரிவில் 4,237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல பி.சி. முஸ்லிம்கள் 432 பேரும் எம்பிசி 2,666 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


எஸ்சி பிரிவில் 766 பேரும் எஸ்சி அருந்ததியர் பிரிவில் 62 பேரும் எஸ்டி பிரிவில் 9 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1019 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


கூடுதல் விவரங்களுக்கு:


தொலைபேசி எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110


இ- மெயில் முகவரி: tneacare@gmail.com


இதையும் வாசிக்கலாம்: Naan Mudhalvan UPSC Scheme: நான் முதல்வன் திட்டம்.. யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு -விண்ணப்பிப்பது எப்படி?