அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் அசைன்மென்ட்டுகளை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு நாளை (டிசம்பர் 24ஆம் தேதி) முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 1 வரை 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 




அரையாண்டு தேர்வுகள்:


அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அன்று அரையாண்டு தேர்வு தொடங்கி, நடைபெற்று வருகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.19  தொடங்கும் தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


மொத்தமாக 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற்று வருகிறது.


2022- 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத் தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


முன்னதாக தேர்வு நாட்களுக்குரிய வினாத் தாள்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தல் வேண்டும் என்று கூறப்பட்டது. 


கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத் தாள்களைத் தயாரித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படை பின்பற்றப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று புகார் எழுந்தது. இதனால், அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் அசைன்மென்ட்டுகளை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.