உயர் கல்வி பயலும் திருநங்கைள், திருநம்பியர், இடைப்பாலினர் ஆகியோருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் போன்ற அனைத்து கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை/ திருநம்பி மற்றும் இடைப் பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்தின் கீழ் பயனடைய திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர் கல்வி பயிலும்போது அவர்களும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக இத்திட்டங்களில் பயன் பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலுமாக தளர்வு செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திரு நம்பி, இடை பாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை சான்றாக சமர்ப்பித்து, வருமான உச்ச வரம்பு எதுமின்றி, பிற உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர் கல்விக்கு இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/