2026ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2ஆம் தேதி) தொடங்கிய நிலையில், வினாத்தாள்களில் ஏதேனும் சந்தேகம், புகார், சந்தேகங்கள் ஆகியவை இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
முதல் முறையாக…
திருவள்ளூர் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி பள்ளியினை சார்ந்த மாணாக்கர் ஒருவருக்கு திரை வாசிப்பு மென்பொருளைப் பயன்படுத்தி கணினி மூலம் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல் கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்கள் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு பெரிய எழுத்துக்களில் A4 அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (Logarithmic books) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும் தேர்வர்கள் Ordinary Calculator without Programming பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் பாதுகாப்பு
தேர்விற்கு வருகைபுரிந்த மாணாக்கர்களுக்கு வினாத்தாட்கள் வழங்கிய பின்னர், ஒவ்வொரு தேர்வறையிலும் மீதமுள்ள வினாத்தாட்களை தேர்வறைக் கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. சீலிடும் இந்த நடைமுறை காரணமாக, வினாத்தாட்களின் மந்தணத் தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டு நேரடி தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரி உறுதி செய்யவும், சார்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டுப்பாட்டு அறை அமைப்பு
பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணாக்கர்கள் தேர்வர்கள் பொதுமக்கள் தேர்வுகள் தொடர்பான புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு வினாத்தாட்கள் தொடர்பாக தேர்வு நாட்களில் அன்றைய தேர்வுக்குரிய வினாத்தாட்கள் குறித்த புகார்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை dgequestionpaperqueries@gmail.com என்ற முகவரியில் /தேர்வர்கள் / பொதுமக்கள்/ மாணாக்கர்கள் தெரிவிக்கலாம்.
