Just In





TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

தமிழக மாநிலக் கல்வித் திட்டத்தின்கீழ் பள்ளிகளுக்கு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நேற்று முடிந்த நிலையில், மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்க உள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வு நேற்று முடிந்தது.
கடைசி நாளில் என்னென்ன தேர்வுகள்?
இறுதி நாளான நேற்று (மார்ச் 25) இயற்பியல், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
இதில் இயற்பியல் வினாத்தாள் சிறிது கடினமாகவும், பொருளாதார கேள்வித்தாள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் எப்போது?
இந்த நிலையில் 12ஆம் வகுப்புத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்தப் பணி ஏப்ரல் 17ஆம் தேதி அன்று முடிய உள்ளன.
அதேபோல மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் ஏப்ரல் 19 அன்று தொடங்குகிறது. 30ஆம் தேதி அன்று முடிகிறது.
பணியில் 46 ஆயிரம் ஆசிரியர்கள்
இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணியும் நடைபெறும்.
தேர்வு முடிவுகள் எப்போது?
ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்பட உள்ளன என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/