மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. இந்த நிலையில் வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் தேர்வு முடிவுகளை எப்படி அறிந்துகொள்வது என்று பார்க்கலாம்.


தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் 26ஆம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கின. தொடர்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிந்தது.


9.1 லட்சம் மாணவர்கள்


இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். தேர்வானது, மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது.


பொது தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க அறை கண்காணிப்பாளர்கள் 48,700 பேர் ஈடுபட்டனர். 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன


ஏப்.12 முதல் விடைத்தாள் திருத்தம்


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 


விடைத்தாள் திருத்தும்போது தமிழ் வழி விடைத் தாள்களை தமிழ் வழி ஆசிரியர்களும் ஆங்கில வழி விடைத் தாள்களை ஆங்கில வழி ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் என்றும் அண்மையில் அறிவுறுத்தப்பட்டது.


இந்த நிலையில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இருக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் இந்த தேர்வு  முடிவுகளை http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in என்னும் இணையதள முகவரிகளை க்ளிக் செய்து, மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். 




வீட்டில் இணைய வசதி இல்லாத சூழலில் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? 


* மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.


* மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.


* அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


* மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.