திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ‘என் கல்லூரிக்கனவு” மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி இன்று  அவர் தலைமையில் நடைபெற்றது.


கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்னும் பெயரில் மாணவர்கள் கனவில் வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்குபெற்றது மகிழ்ச்சியளிக்கின்றது. கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டுமில்லை கல்வியை பயன்படுத்தி நமது வாழ்வை எப்படி சிறப்பாக அமைத்துக் கொள்கிறோம் என்பதை கல்வியாக உயர் கல்வி பயில்வதன் மூலம் நமது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். உலகத்திற்கே எழுத்தறிவித்த சமூகம் நமது தமிழ் சமுதாயமாகும். சங்க காலத்தில் நமது சமூகத்தில் பெண்கள் புலவர்களாலும் அரசருக்கு அறிவுரை கூறும் இடத்தில் இருந்தார்கள்.




திருக்குறளை மிஞ்சிய நூல் இந்த உலகத்தில் எங்கும் இல்லை


திருக்குறளை மிஞ்சிய நூல் இந்த உலகத்தில் எங்கும் இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து சமூகத்திற்கும் தேவையான வாழ்க்கை முறை கருத்துக்கள் அதில் இருக்கிறது. கல்வியே ஒருவருக்கு சிறந்த செல்வமாகும். வாழ்க்கை வேறு கல்வி என்பது வேறு. கல்வி என்பது சிந்திப்பது கற்றுத் தருவதாகும். கல்வி பற்றிய நமது எண்ணங்களை மாற்ற வேண்டும். நமது எண்ணத்தை பொருத்தே நமக்கு மதிப்பு கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் அதில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் மருத்துவம் மட்டுமே கல்வி என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலைகள் மூலமாகத்தான் நமது திறமைகள் முழுவதும் வெளிவரும். நெருக்கடிகளை கையாள அனைவரும் கற்றுக்கொள்ள வேணடும். வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் நமக்கு கைகூடி வரும் வரலாற்றை எடுத்துக் கொண்டால் நமது பல்வேறு அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். தேர்வில் தோல்வியடைந்தால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். மறுவருடம் தேர்வு எழுதி அதனை சரி செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ஏளனமாக பேசுவார்கள் என்று நினைக்க வேண்டாம்.


 




எப்பொழுது வேண்டுமானாலும் வாழ்வில் மாற்றங்கள் நிகழும்


பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள் அவர்களை நீங்கள் சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது. அவர்கள் உங்களை நினைத்து வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தும் சூழ்நிலை உருவாக்கக் கூடாது. எப்பொழுது வேண்டுமானாலும் வாழ்வில் மாற்றங்கள் நிகழும். பல்வேறு தொழிற்சாலைகளில் நமக்கான வாய்ப்புகள் இருக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடினமான முயற்சிகள் மூலம் தான் சாதனைகள் புரிய முடியும். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியை பயன்படுத்தி உங்கள் வாழ்வை மேம்படுத்தி கொள்ள வேண்டும். என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்  கேட்டுக் கொண்டார்.


இன்று நடைபெற்ற என் கல்லூரிக்கனவு கருத்தரங்கில் திருவண்ணாமலை, கலசபாக்கம், செங்கம், போர் மற்றும் ஜவ்வாதுமலை ஒன்றியத்தை சார்ந்த சுமார் 1200 மாணவ, மாணவியர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அரசு அலுவலர்கள் பெற்றோர்கள் காப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.