திருப்பூர் மாவட்டத்தில் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் தங்களது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த காலங்களில் இவர்களின் குறிக்கோள் வேலை செய்வது பணம் சம்பாதிப்பது அதை ஊருக்கு கொண்டு செல்வது என்பது மட்டுமே இருந்து வந்தது. தற்பொழுது அந்த நிலை மாறி தாங்கள் வேலை செய்தாலும் பரவாயில்லை தங்களது குழந்தைகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இங்கேயே தங்கி இருந்து பணிபுரிந்து வருவதால் அவர்களின் குழந்தைகள் தமிழை நன்றாக கற்று தமிழ் பேச வேண்டும் என்று அரசு பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின் கல்விக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநில குழந்தைகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இந்தி மொழியில் குழந்தைகளிடம் பேசி அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியும் ஹிந்தி மூலமாக தமிழ் வழிக் கல்வியும் கற்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், முதலில் எழுத்து வடிவம் பின்னர் கதை வடிவிலான பாடங்கள் என சிறுக சிறுக அவர்களுக்கு தமிழை புரிய வைத்து அதன் பிறகு தமிழ் வழிக் கல்வியை பயில வைப்பதாகவும், ஆரம்ப காலங்களில் தமிழ் மொழி கற்க சிரமப்பட்டாலும் போகப்போக மிக எளிதாக தமிழ் வழிக் கல்வியை வட மாநில குழந்தைகள் சிறப்பாக கற்று தேர்ந்து வருவதாகவும் தமிழில் எழுதவும் படிக்கவும் நன்கு பழகி விட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணி சவாலாக இருந்தாலும் மற்ற மாநில குழந்தைகள் தமிழ் கல்வியை விரும்பி படிப்பதை காணும் போது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமின்றி தற்பொழுது தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வி இயக்குனர் ஒரு உத்தரவு பிறப்புத்துள்ளார். அதன்படி வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் வட மாநில மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவிலான வட மாநில மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆசிரியர்கள் கூறினார்.
தமிழ் கற்பது தொடர்பாக வடமாநில குழந்தைகள் கூறுகையில், "ஆரம்ப காலங்களில் தமிழ் கற்பது சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் பயிலும் போது மிக எளிதாக மொழிப்பாடங்களை கற்க முடிகிறது. உடன் படிக்கும் சக மாணவ மாணவிகளும் தமிழிலேயே உரையாடுவதால் எங்களுக்கு அதனை கற்றுக்கொள்ள இன்னும் எளிதாக இருந்தது. அது மட்டும் இன்றி வீடுகளிலும் நாங்கள் தமிழ் மொழியிலேயே பேசிக் கொள்வதால் வெகு விரைவிலேயே சரளமாக பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டோம். வருகின்ற பொதுத் தேர்வுகளிலும் மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழி பாடங்களிலும் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுவதோடு அரசு போட்டித் தேர்வுகளுக்கும் எங்களை தயார் படுத்திக் கொள்வோம்" என்றனர்.