Just In





முட்டை கேட்டது குத்தமா? பள்ளி மாணவரை துடைப்பத்தால் வெளுத்த சத்துணவு ஆயா- பகீர் வீடியோ
இதனால் அங்கு சத்துணவு சமையலராகப் பணியாற்றிய லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மா இருவரும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் முட்டை கேட்ட மாணவரை சத்துணவு ஊழியர்கள் சரமாரியாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இருவரும் தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதிய உணவுடன் முட்டை சேர்த்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆங்காங்கே முறைகேடுகள் நடப்பதாகப் புகார்க் குரல்கள் எழுந்து வருகின்றன.
முட்டை எங்கே?
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசுப் பள்ளியில், மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுக்கு சரிவர சத்துணவு முட்டைகள் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் ஒருவர் சத்துணவு சாப்பிடும்போது முட்டை எங்கே என சத்துணவு ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.
இதனால் அங்கு சத்துணவு சமையலராகப் பணியாற்றிய லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மா இருவரும் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து அந்த மாணவரை துடைப்பத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் பணியிடை நீக்கம்
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முட்டை கேட்ட மாணவர் மீது தாக்குதல் நடத்திய சத்துணவு ஊழியர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ததற்கு பதிலாக, ஒரேடியாகப் பணி நீக்கம் செய்து இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.