தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகள் மூலம் தெரிவு செய்யும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் "தேர்வுக் களம்" என்னும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இச்செயலியினை பதிவிறக்கம் செய்து, அதன் பயனாளிகள் உரிய வகையில் பயன்படுத்த ஏதுவாக, இச்செயலி குறித்த விழிப்புணர்வை மாவட்டம் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

எதற்காக இந்த செயலி?

நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், (TNUSRB), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) போன்ற தேர்வு முகமைகள் மூலம் பணியாளர்களை தெரிவு செய்யும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ’’தேர்வுக்களம்" என்னும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி (Integrated Mobile App) தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Continues below advertisement

என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

தமிழ்நாடு அரசின் தெரிவு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் குறித்த அனைத்து ஆட்சேர்ப்பு அறிவிப்புகள், அத்தேர்வர்களுக்கு இணையம் (online) வழியே விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வுமுடிவுகள், செய்தி வெளியீடுகள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய போட்டித் தேர்வுகளின் விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளின் காணொளிகள், வேலைவாய்ப்புச் செய்திகள் உள்ளிட்ட செய்தித்தாள்களில் அளிக்கப்படும் அறிவிப்புகள் ஆகியவற்றை இருக்கும் இடத்திலிருந்தே தெரிந்துகொள்ள இயலும்.

கைபேசிக்கு உடனடியாக அறிவிப்பு

குறித்த நேரத்தில், நுழைவுச் சீட்டுக்கள், தேர்வுமுடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நேரடியாக ஆர்வலர்களின் கைபேசிக்கு உடனடியாக அறிவிக்கப்படும் வண்ணம் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த தகவலும் தவறவிடப்படாமல் தேர்வர்கள் சிறப்பாகவும், திறமையாகவும் தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்ள முடியும்.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வு வாரியம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் நடைபெறும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களையும் இச்செயலியில் பெறலாம்.

பல செயலிகள், பல வலைத்தளங்கள், பல உள்நுழைவுகள் போன்ற பயன்பாட்டினை குறைத்து, ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் பெறும் வசதியை இந்த தேர்வுக் களம் (Thervukkalam) செயலி வழங்குகிறது.

பயனாளிகள் அல்லது ஆர்வலர்கள் Play Store அல்லது App Store மூலம் தேர்வுக்களம் செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து, உள்நுழைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது மிக எளிதான நடைமுறையாகிவிடும். இதனால் பணிநாடுநர்களின் நேரமும், முயற்சியும் மிச்சமாகும்.

எனவே, இச்செயலியின் பயன்பாட்டினை, அதன் பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், அதனை பயனாளிகள் அனைவரும் பதிவிறக்கம் செய்து உரிய வகையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் விதமாகவும் இச்செயலி குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு மாவட்டம் தோறும் கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.