பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளதாக, துணைவேந்தர்களை அரசு நியமிக்கும் மசோதாமீது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 


உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாடு இன்று (ஏப்.25) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 'வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு', '2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும்' ஆகிய தலைப்புகளில் நடக்கும் இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.


உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை நடத்தி வரும் நிலையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


கர்நாடக மாநிலச் சட்டத்தின்படி, மாநில அரசின் ஒப்புதலின்படியே துணைவேந்தர்களை நியமிக்க முடியும். அந்த வகையில் தமிழ்நாடு அரசும் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் மட்டுமே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ள நிலையில், மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர் - மாநில அரசுகள் இடையே மோதல் முற்றி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் பதவியே தேவையில்லை என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''தமிழ்நாட்டு உயர் கல்வித்துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வேந்தராக ஆளுநரும் இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சரும் இருக்கின்றனர். கொள்கை முடிவுகளை எடுக்கும் அரசுக்கு, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாமல் இருப்பது, உயர் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலந்து ஆலோசித்து, ஆளுநர் துணை வேந்தர்களை நியமிப்பது மரபாக இருந்து வந்துள்ளது. அண்மைக் காலமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேக உரிமை என்பதுபோலச் செயல்பட்டு வருகிறார். மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது. 


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க முடியவில்லை. இது ஒட்டுமொத்த பல்கலை., நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் இத்தகைய அதிகாரங்களைக் கொடுப்பது, அரசுகளுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அதிமுக ஆதரவு


பூஞ்சி ஆணையப் பரிந்துரையை ஏற்கலாம் என்று 2017-ல் அதிமுக ஆட்சியில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிமுக உறுப்பினர்களுக்கும் இந்த மசோதாவை ஆதரிப்பதில் நெருடல் இருக்காது.


பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசின் ஒப்புதலோடு, ஆளுநர் நியமிக்கிறார். குஜராத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களிலும் உரிய திருத்தம்செய்து, பல்கலை. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


முன்னதாக இந்த மசோதாவுக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.