பழங்குடியினர்‌ தொடர்பான ஆராய்ச்சி மற்றும்‌ ஆய்வு மேற்கொள்ளும்‌ இளங்கலை, முதுகலை, முனைவர்‌ பட்டம்‌, முனைவர்‌ பட்ட மேலாய்வு மாணக்கரை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு "தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்ணப்பிக்க என்ன தகுதி?

* தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டத்தின்‌ கீழ்‌ தகுதிபெற மாணாக்கரின்‌ குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்துக்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

* மாணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

* மாணவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் 55 வயதுக்கு உட்பட்டோராகவும் இருக்க வேண்டும். 

* மாணாக்கர்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும்‌ ஆய்வு மேற்கொள்ள வேண்டும்‌.

எவ்வளவு உதவித் தொகை?

இத்திட்டத்தின்‌ கீழ்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ இளங்கலை மற்றும்‌ முதுகலை மாணாக்கருக்கு மாதம்‌ ரூ.10,000/-மும்‌ (6 மாதத்திற்கு) மற்றும்‌ முனைவர்‌ பட்டம்‌, முனைவர்‌ பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம்‌ ரூ.25,000/-மும்‌ (3 வருடத்திற்கு) உதவித் தொகையாக (fellowship) வழங்கப்படும்‌.

இதன்படி, இளங்கலை மற்றும்‌ முதுகலை மாணாக்கர்கள் 25 பேருக்கும் முனைவர்‌ பட்டம்‌, முனைவர்‌ பட்ட மேலாய்வாளர்கள் 45 பேருக்கும் என மொத்தம் 70 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தற்போது தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டத்தினை 2024-2025 ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம்‌ 05.11.2024 –ல் இருந்து இணைய வழியிலும்‌ (Online) மற்றும்‌ இயன் முறையிலும்‌ (Offline) வரவேற்கப்படுகின்றன.

நவம்பர் 30 கடைசி

இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்,நேரடியாக 30.11.2024-க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்.‌ மற்றும்‌ இயன்முறையில்‌ விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணாக்கர்‌ https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர்‌, பழங்குடியினர்‌ நலன்‌, சேப்பாக்கம்‌, சென்னை- 600005 என்ற முகவரிக்கு 30.11.2024 க்குள்‌ அனுப்பி வைக்குமாறும்‌ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்‌.

மேற்கண்ட விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை செயலாளர்‌ தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://cms.tn.gov.in/sites/default/files/forms/Tribal_studies_Fellowship.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.