ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பெற்றெடுக்கும் தாய், தந்தைக்கு அடுத்தது.. வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள்தான். குழந்தைப் பருவம் ஆசிரியர்களாலேயே அழகுற செதுக்கப்படுகிறது. அற்புதமாய்க் கற்பிக்கும் ஓர் ஆசிரியரால், அந்தப் பாடமே நமக்குப் பிடித்ததாக மாறிவிடுவதை அனைவருமே எதிர்கொண்டிருப்போம். 


நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், அவர்களின் வகுப்பறை எதைக் கொடுக்க வேண்டும்? 


அன்பாசிரியர்கள் சிலரிடம் பேசினேன். அவர்கள் கூறிய ஆசிரியருக்கான அடிப்படைப் பண்புகள் இதோ..!


ஆசிரியரும் கல்வி செயற்பாட்டாளருமான உமா மகேஸ்வரி


20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும்போது கற்பித்தல் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும்போதே, மதிப்பெண்களைக் காட்டிலும்  குரல் வளம், உடல் மொழி, ஆளுமைத் திறன் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். 


ஆசிரியர் - மாணவர் இடையே இடைவெளி


ஆனால் தற்போது ஆசிரியர்களின் பாடத் திறன்கள்தான் முதன்மையாகப் பார்க்கப்படுகின்றன. வேலைக்கும் பதவி உயர்வுக்கும் பாடம் சார் அறிவே அடிப்படையாக இருக்கிறது. இதனால் ஆசிரியர்கள் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துபவராக மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றனர். இதனால் பாடத்திட்டம் தாண்டி ஆசிரியர்களால் யோசிக்க முடிவதில்லை. இது ஆசிரியர் - மாணவர் இடையே இடைவெளியை ஏற்படுத்துகிறது. 


ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிதான் தலையாய பணி. ஆனால் அதையே செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தைக் கூட முழுமையாக வாசிக்க முடியாத நிலை இருக்கிறது. இதற்கு சிஸ்டம் சரியில்லை என்று ஆசிரியர்களே கூறுகிறோம். ஆனால், அந்த சிஸ்டத்துக்குள், ஆசிரியர்கள், மாணவர்கள்தான் முதலில். பிறகுதான் பெற்றோர்கள், துறை, அரசு எல்லாமே என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  




ஆசிரியரின் அடிப்படைப் பண்புகள்


* கல்வி தனியார் மயமாகிவிட்ட சூழலில், தனியார்மயமாக்கல் பற்றி யோசிக்கவே தெரியாத குழந்தைகளைத்தான் உருவாக்கி வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும். 


* ஆசிரியர்கள் சம வாய்ப்பு, பாலின சமத்துவம், இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து வகுப்பறைகளில் உரையாட வேண்டும். இவை குறித்து ஆசிரியர்களுக்கு குறிப்பாக சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. 


* வகுப்பறை ஜனநாயக முறையில், உரையாடல் வழியில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள் வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்க வேண்டும். வகுப்பில் பிரம்பு வேண்டும் என்று நினைக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதன் வழியாக அதிகாரத்தை முன்னிறுத்துகிறார்கள். இது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.  


* ஒவ்வொரு மாணவர் பற்றியும் ஆசிரியர் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் குடும்பம், பொருளாதார சூழல் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக, ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:25 என்ற அளவில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். 


மாணவர்கள் மத்தியில் சம வாய்ப்பு


* கற்றல் வாரியாக மாணவர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. நன்றாகப் படிப்பவர்களை விட, கூடுதல் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் சம வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 


* மாணவர்களை வேலைவாய்ப்புக்காக மட்டும் தயார் செய்யக்கூடாது. 100 சதவீதத் தேர்ச்சி என்பதைத் தாண்டி,  ஒரு மாணவனை உண்மையான மனிதனாக, மனிதநேயப் பண்பு கொண்டவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். 


* ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும். அவை குறித்து மாணவர்களுடன் தொடர்ச்சியாக உரையாட வேண்டும். அதை உத்வேகமாகக் கொண்டு, மாணவர்களையும் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். வாசித்தல் சூழலை மாணவர்களிடையே விதைக்க வேண்டும். 




தேசிய, மாநில நல்லாசிரியர் விருதுகள் பெற்ற ஆசிரியர் திலிப்


* ஆசிரியத் துறையைத் தேர்ந்தெடுக்கும்போதே பணியில் சுய விருப்பு, வெறுப்பை விட்டுவிட உறுதிபூண வேண்டும். நாம் சேவைப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். 


* ஆசிரியப் பணி இந்த நாளுக்குள் இதை முடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துச் செயல்படும் பணி அல்ல. நமக்கான இலக்கை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். மாணவர்களின் திறனை, ஒழுக்கத்தை வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.


* சாதி, இனம், மொழி தாண்டி பாகுபாடு இல்லாமல் மாணவர்களை அணுக வேண்டும். 


* ஊரடங்குக்குப் பிறகு மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் சமத்துவமின்மை, கவனச்சிதறல், பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றை ஆசிரியர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். 


* சரியோ, தவறோ ஆசிரியர் சொல்வதை வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் மாணவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதால், ஆசிரியர் சரியான ரோல் மாடலாக நடந்துகொள்ள வேண்டும். 


* ஒழுக்க நெறிகளை ஆசிரியர் பின்பற்றி, மாணவர்கள் அவர்களாகவே பின்பற்றுமாறு செய்ய வேண்டும். 


* தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சி, சுதந்திரம் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


சரியாக வழிகாட்ட வேண்டும்


* ஒவ்வொரு பாட வேளைக்கும் நாம்தான் முதலாளி. அதை உணர்ந்து முழுமையாக மாணவனைக் கற்றலில் ஈடுபடச் செய்ய வேண்டும். நமக்கான நேரத்தில் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும். 


* தன்னுடைய வகுப்பு என்றில்லாமல் அவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளிலும்... ஏன் வாழ்க்கையிலும் உயரும் வரை ஆசிரியர்கள் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும். அதைக் காட்டிலும் முக்கியம்... சரியாக வழிகாட்ட வேண்டும். 


* இறுதியாக ஒன்று... ஒன்றைச் செய்ய முடியவில்லை என்பதற்கு ஒருவர் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் செய்யலாம் என்பதற்கு ஒற்றைக் காரணம் போதும். அதை ஆசிரியர்கள் நினைவில் கொண்டாலே போதும். 




ஆசிரியர் சித்ரா


* ஆசிரியர்களுக்குப் பொறுமை மிகவும் அவசியம். 


* தங்களை அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். புதுப்புது விஷயங்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். 


* சகிப்புத் தன்மையை அடிப்படைப் பண்பாகக் கொண்டிருக்க வேண்டும். 


* ஒரு விஷயத்தை மாணவருக்குக் கடத்தும்போது, அது அவருக்குப் புரிகிறதா என்பதை உணர்ந்து கற்பிக்க வேண்டும்ம். 


* குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கக் கற்பிக்க வெண்டும். அவர்கள் படித்து டிகிரி வாங்கி, உயர் பதவிக்குச் சென்றாலும், குறைவாகப் படித்து சாதாரண வேலையில் இருந்தாலும் அவர்கள், வாழ்க்கையை மகிழ்வாக வாழக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஓர் ஐஏஸ் ஆக இருந்தாலும் அவரின் ஓட்டுநராக இருந்தாலும் மகிழ்ச்சியே முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும். 


* பிரச்சினைகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. அதை சமாளிக்கும் திறனை வளர்க்க, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும். 


இவ்வாறு ஆசிரியர்கள் பல்வேறு பண்புகளைப் பட்டியலிட்டனர்.


தன்னலமில்லாமல், மாணவ சமுதாயத்தின் நலன் கருதி அன்புடன் உழைக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.