Tancet Ceeta Exam: டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வு: பிப்.7 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Tancet Ceeta Exam 2024: எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு பிப்ரவரி 7 வரை விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

Tancet Ceeta Exam 2024: தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர, மாணவர்கள் டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர். ஆண்டுதோறும் இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 

Continues below advertisement

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஇஇடிஏ சீட்டா தேர்வு

கடந்த 2022ஆம் ஆண்டு வரை எம்.இ. (முதுகலை பொறியியல்), எம்.டெக். (முதுகலை தொழில்நுட்பம்), எம்.ஆர்க். (முதுகலை கட்டிடவியல்) எம்.பிளான் (முதுகலை திட்டமிடல்) (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2023ஆம் ஆண்டில் இருந்து சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) நடத்தப்பட்டு வருகிறது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. சிஇஇடிஏ தேர்வு மூலமாக, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை செயல்முறையை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.

அந்த வகையில் நடப்பாண்டிற்கான தேர்வு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். அந்த கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 

தேர்வுகள் எப்போது?

எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு வருகிற மார்ச் 9ஆம் தேதி காலையும், எம்.பி.ஏ., தேர்வு மதியமும் நடக்கிறது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் 10ம் தேதி காலை நடைபெறும். தமிழகத்தின் 14 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்ற போதிலும், டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். 

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

புதிதாக விண்ணப்பிக்க Sign Up என்ற பொத்தானை சரியான தகவல்களை உள்ளிட்டு அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், Login செய்து விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet

தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289 

இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com

Continues below advertisement
Sponsored Links by Taboola