தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடவே, தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அனுமதி
மாணவ/ மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/ மாணவியருக்கு, ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில், ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00,000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.
2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13,57,25,000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் (ரூபாய் ரூ.217,63,09,395/க்கான இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராசர் என்பதால் அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
