பிஎஃப் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகை திட்டத்தை EPS-95 (Employees' Pension Scheme, 1995) என அழைக்கின்றனர்.

Continues below advertisement

தற்போது இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதிய தொகை 1000 ரூபாய். இதனை 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில் EPS-95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000இல் இருந்து உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன, இருப்பினும், இந்த ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்துவது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

Continues below advertisement

அரசு இந்த ஓய்வூதிய திட்டத்தை உயர்த்தாமல் இருப்பதற்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஓய்வூதிய திட்டம் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு-வரையறுக்கப்பட்ட பலன் (Defined Contribution-Defined Benefit) என்ற அடிப்படையில் இயங்குகிறது. ஊழியருக்காக நிறுவனம் வழங்கும் பிஎஃப் பங்களிப்பில் 8.33% பகுதியை ஓய்வூதியதிற்காக தான் செல்கிறது.

தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம், மத்திய அரசின் கூடுதல் பட்ஜெட் ஆதரவு மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இது EPFO நிர்வகிக்கும் 1.16% பங்களிப்பிலிருந்து வேறுபட்டது. எனவே எந்தவொரு ஓய்வூதிய உயர்வு முடிவும், ஓய்வூதிய நிதியின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் அரசுக்கான எதிர்கால நிதி பொறுப்புகளை கருத்தில் கொண்டே எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்பு அளிப்பதில் அரசு உறுதியாக இருந்தாலும், நிதியின் ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது EPS-95 திட்டம் EPS-2026 என்ற புதிய திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதிய தொகை, பிஎஃப் பங்களிப்பு உள்ளிட்டவை மாற்றப்படவில்லை. மாறாக டீஜிட்டல் முறையில் பிஎஃப் கணக்கு மேம்பாடு என்பதற்கே முன்னுரிமை தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

எனவே ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரி வரும் 7,500 ரூபாய் ஓய்வூதிய உயர்வு தொடர்பாக, அரசு தற்போது எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருந்தாலும் 1000 ரூபாய் என்பது இன்றைய விலைவாசிக்கு ஒரு வார செலவுக்கு கூட பத்தாது என்பதே ஓய்வூதியதாரர்களின் கவலை. அரசு விரைவில் இதற்கு செவிமடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.