தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டைப் பொறுத்தவரை 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைந்தன. இவர்களுக்கு ஏப்.6-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.


4 முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் தேர்வு வைக்கப்பட்டு, ஏப்ரல் 24-ல் இருந்து மீண்டும் கோடை விடுமுறை தொடங்கியது.


பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 23 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏப்ரல் 9 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.


12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் முறையே மே 6ஆம் தேதி மற்றும் மே 10ஆம் தேதி வெளியாகின. இதைத் தொடர்ந்து 2024- 25ஆம் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று (மே 22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமர குருபரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?


இந்தக் கூட்டத்தில், ’’ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஜூன் 7 வெள்ளிக் கிழமை வருவதாலும் அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை அதாவது ஜூன் 10ஆம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளையும் திறக்கலாம்’’ என பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து முடிவெடுத்து, அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே தேதியில்தான் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.