தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம், ரூ.436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம், ரூ.101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள், ரூ.1887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் என கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு, இந்தியாவில் தலை சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


மனிதனை மனிதனாக உயர்த்துவது கல்வி. மனித சமுதாயத்தை மாற்றி அமைக்கும் வலிமையான கருவி கல்வி. Education is a tool for Social Change என்று ஆங்கிலத்திலும் கூறுவர்.


அந்தக் கல்வி, வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் இட்டாலும் வேகாது; கள்வரால் கொள்ளையடிக்கவும் இயலாது; பிறர்க்குக் கொடுத்தாலும் குறையாது; எனக் கல்விச் செல்வத்தின் பெருமையை விவேக சிந்தாமணி பாடல் கூறும். எனவேதான், கல்வி வளர்ச்சிக்கு எல்லோரும் தொண்டு செய்கிறார்கள்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.


கல்வி வளர்ச்சியில் தொடக்கக் கல்வி மிகமிக முக்கியமானது.  அது ஒரு மாளிகைக்கு அடித்தளம் போன்றது; அடித்தளம் வலுவாக இருந்தால்தான் அதன் மீது எழும்பும் கட்டடம் மிகவும் வலுவாக அமையும்.  அதுபோலத்தான் கல்வியின் ஆரம்பம்-தொடக்கம் சரியாக அமைந்து விட்டால் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அதுவே குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.  


இந்தச் சிந்தனையின் அடிப்படையில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள்.  புதிய புதிய திட்டங்களைத் தந்து குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வந்து கற்கும் சூழ்நிலையை மேம்படுத்தி வருகிறார்கள். 


அந்த வகையில் முதலமைச்சர் உருவாக்கியுள்ள திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.


இதற்குத் துணை புரியும் திட்டங்கள் பல:


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்


குழந்தைகள் காலையில் வீட்டில் உணவு உண்ணாமலேயே பள்ளிக்கு வருகிறார்கள் என்பதைப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் கூறக் கேட்டு அறிந்த முதலமைச்சர் உடனடியாக உருவாக்கிய திட்டம் காலை உணவுத் திட்டம்.


முதலமைச்சரின் இந்தக் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி. நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து 31,008 அரசுத் தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 18.54 இலட்சம் மாணவ, மாணவியர் இன்று பள்ளி வந்ததும் சூடான, சுவையான காலைச் சிற்றுண்டியை உண்டு படிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.


காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சியோடு இத்திட்டத்தை வரவேற்று முதலமைச்சரை வாழ்த்துகிறார்கள். இத்திட்டத்தால் பள்ளிக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


இத்திட்டத்தை, இந்தக் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2.50 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும், இத்திட்டம் இந்த ஆண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.


இல்லம் தேடிக் கல்வித் திட்டம்


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா காலக் கற்றல் இடைவெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். மூன்று ஆண்டுகளாக ரூ.590.27 கோடியில் செயல்படுத்தி வரும் இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1.65 இலட்சம் தன்னார்வலர்கள் மூலம் 24 இலட்சம் குழந்தைகள் பயன் பெற்றுவருகின்றனர்.


வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம்


கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்திடும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் அடங்கிய சிறு நூல்கள் மூலம் தொடர் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் தமிழ்நாடு முழுவதிலும் குந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றதைக் காண முடிந்தது.


குழந்தைகளின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவற்றை வெளிக்கொணரும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படக் கொண்டாட்டம், 2023 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடத்தப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்திலும் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.


எண்ணும் எழுத்தும்


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது, எண்ணும் எழுத்தும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் 37,866 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 22‘.27 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.


நுழை-நட-ஓடு-பற-திட்டம்


குழந்தைகள் அணுகக்கூடிய எளிய மொழியில் புத்தகங்களின்மேல் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஈடுபடுத்தும் வகையில் வண்ணப் படங்களுடன் நுழை நட, ஓடு, பற என நான்கு தனித்தனி வாசிப்பு நிலைகள் கொண்டதாக 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


அடுத்து, 50 புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் பல வண்ணப் படங்களுடன் குழந்தைகள் கண்டதும் ஆர்வத்துடன் புத்தகங்களைக் கையில் எடுக்கத் தூண்டும்வண்ணம் அமைந்துள்ளன.


காடு / மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி காட்டுப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் பள்ளிகளுக்குச் சென்று வருகின்ற குழந்தைகளுக்கு ஆபத்தான பல சிரமங்கள் உள்ளன. அந்தச் சிரமங்கள் அனைத்தையும் நீக்கிட முதலமைச்சர் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.


2023-24 ஆம் ஆண்டில் தொலைதூர / அடர்ந்த காடு / மலைப் பகுதிகளில் உள்ள 1692 குடியிருப்புகளைச் சேர்ந்த தொடக்கநிலை முதல் உயர்நிலை வரையில் படிக்கும் 27,707 மாணவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்றுவர போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகளையும் ஏற்படுத்தினார்கள். இதனால், குழந்தைகள் அச்சமில்லாமல் பள்ளிகளுக்கு வந்து பயில்வது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்


முதலமைச்சர் அவர்கள் நல்ல வகுப்பறைச் சூழ்நிலைகள் குழந்தைகளின் படிப்பார்வத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதைக் கருதி, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) ரூ..435.68 கோடிசெலவில் அமைத்துள்ளார்கள்.


மேலும், அனைத்து அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் 100 Mbps அதிவேக இணைய இணைப்பைப் பெறவும் முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்.


இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள்


முதலமைச்சரின் சிறப்புத் திட்டமாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்பத் தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் 101 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கைக் கணினிகள் (Tablet) வழங்க ஆவன செய்துள்ளார்கள்.


மாற்றுத் திறன் மாணவர்களுக்குத் தனி கவனம்


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப் படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு போன்ற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் “நலம்நாடி”என்னும் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.