அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் ஜூலை 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2 சுற்றுக் கலந்தாய்வு முடிவில் 63 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. மாத இறுதி வரை மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவகாசம் முடிந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கைப் பணிகளும் துரித கதியில் நடைபெற்றது. 


63 சதவீத இடங்களே நிரம்பின


எனினும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2 சுற்றுக் கலந்தாய்வு முடிவில் 63 சதவீத இடங்கள் நிரம்பின. மீத இடங்களை நிரப்ப முடிவெடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் ஜூலை 2 முதல் 5ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாணவர்களுக்காக சேர்க்கையை, கல்லூரிகள் ஜூலை 8ஆம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும்.


கல்லூரியில் மாணவர்கள் கோரும் பாடப் பிரிவுகள் காலியாக இருந்தால், கல்லூரி முதல்வர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tngasa.in/


மாணவர்கள் இதே இணைய தளத்துக்குச் சென்று, விண்ணப்பப் பதிவு குறித்து அறிந்துகொள்ளலாம்.


புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.


விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் குறித்து முழுமையாக அறிய https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction.pdf?t=1684734156651 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். ஸ்டெப் பை ஸ்டெப்பாக வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முழு பட்டியலைக் காண: https://static.tneaonline.org/docs/arts/college_list.pdf?t=1684479144557 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


கூடுதல் விவரங்களுக்கு: tngasa24@gmail.com
தொலைபேசி எண்கள்: 044 - 24343106, 044 - 24342911